ஜனவரி 26ம் தேதி இலங்கை அதிபர் தேர்தல்
கொழும்பு: இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி அறிவித்தது.
இலங்கையில் நடைபெறும் 6வது அதிபர் தேர்தல் இது. ராஜபக்சேவின் பதவிக்காலம் இன்னும் 2 வருடங்களுக்கு உள்ளது. ஆனால் விடுதலைப்புலிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றியை வைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்தி மீண்டும் பதவியில் அமர அவர் திட்டமிட்டார்.
இதையடுத்து முன்கூட்டியே தேர்தல் வருகிறது. தேர்தல் தேதியை இலங்கை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணையர் தயானந்த திஸநாயகே வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை அதிபர் தேர்தல் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும்.
டிசம்பர் 17ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படும். காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சேவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நிறுத்தப்படவுள்ளார்.
தமிழர்களைக் கவருவாரா கருணாரத்னே...?
அதேசமயம், தமிழர் ஆதரவு சிங்களத் தலைவரான விக்ரமபாகு கருணாரத்னேவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழர் தாயகத்தை இவர் அங்கீகரிப்பதாக கூறப்படுவதால் இவருக்கு தமிழர்களின் வாக்குகள் பெருமளவில் சாயும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாரம்பரிய ஆசிரியர் குடும்பத்தில் பாதுல்லா மாவட்டத்தில் பிறந்தவர் கருணாரத்னே. 66 வயதாகும் இவர், கேம்பிரிட்ஜில் பொறியியல் படித்தவர். இருப்பினும் அரசியலில் சேர்ந்தார். இடதுசாரி அரசியலில் ஈடுபட்டார். ஆரம்பம் முதலே தமிழர்களுக்கு ஆதரவாக பேசி வருபவர் கருணாரத்னே. தமிழர்களின் சுய உரிமைப் போராட்டத்தை ஆதரித்தவர்.
சமீப காலமாக தனது பேச்சுக்களில் தமிழர் தாயகம் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர்களுக்காக தீவிரமாக குரல் கொடுத்து வந்ததால் 1988ம் ஆண்டு இவரை ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியினர் துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆதரவு வேண்டும்-பொன்சேகா:
தற்போதைய நிலையில் ராஜபக்சேவே மீண்டும் அதிபராக வேண்டும் என இந்தியா விரும்புகிறது. அமெரிக்காவின் விருப்பம் பொன்சேகா எனக் கூறப்படுகிறது. யார் வந்தாலும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது சீனா.
இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளார் பொன்சேகா. அகில இந்திய வானொலிக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
இலங்கையை செழுமைப்படுத்தும் எமது எதிர்காலத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும். இலங்கையின் எதிர்காலத்தைத் தாம் வளப்படுத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும்.
எனக்கு இந்தியாவை ரொம்பப் பிடிக்கும். மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுப்பதற்குத் தன்னால் இயல்வதை எப்போதும் செய்து கொடுப்பேன்.
எனது திட்டங்களை விரைவில் மக்களுக்கு அறிவிப்பேன் என்று கூறியுள்ளார் பொன்சேகா.
புத்தர் கோவிலிலிருந்து தொடங்குகிறார்...
இதற்கிடையே, அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தனது முதலாவது செய்தியாளர் கூட்டத்தை பிரபல களனி ரஜமஹா புத்தர் விகாரையில் நடத்துகிறார் பொன்சேகா. ஞாயிற்றுக்கிழமை இந்த செய்தியாளர் கூட்டம் நடைபெறவுள்ளது.
இங்குதான் ஜெயவர்த்தனே உள்ளிட்ட பல்வேறு சிங்களத் தலைவர்கள் தங்களது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார்களாம். எனவே ராசிக்காக இங்கிருந்தே தனது அரசியல் வாழ்க்கையையும் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் பொன்சேகா.












Click it and Unblock the Notifications