யாருக்கும் ஆதரவில்லை; '49 ஓ' விதியை பயன்படுத்துவோம்-ராமதாஸ் அறிவிப்பு

இந்தத் தொகுதிகளில் பாமகவினர், யாருக்கும் வாக்களி்க்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கும் '49 ஓ' விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேர்தல் அதிகாரிகளிடம் சமர்பிப்பார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை என்பது பயந்து எடுக்கப்பட்ட முடிவல்ல.
ஒரு நாடாளுமன்ற தொகுதியிலோ, சட்டமன்ற தொகுதியிலோ கோர்ட்டு தீர்ப்பு மூலம் பதவி காலியானால் தவிர வேறு காரணங்களால் வெற்றிடம் ஏற்பட்டால் அந்த தொகுதியில் இருந்து பொது தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் எந்த கட்சியில் இருந்தாரோ அந்த கட்சியே ஒரு எம்எல்ஏவை நியமித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்பது பாமகவின் கொள்கை.
அதே போல தற்போது இடைத் தேர்தல் வெற்றியை பணம் தான் முடிவு செய்கிறது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சுவாமி, தற்போதைய தேர்தல் அதிகாரி ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர். அதைத் தடுக்க அதிகாரம் இல்லை என்கிறார்கள்.
தேர்தல் முறைகேடுகளை தடுக்க முடியாத எந்திரமாக தேர்தல் ஆணையம் உள்ளது. பாமக இடைத் தேர்தலில் போட்டியிடாததற்கு இவைகளும் காரணம்.
அதே போல தற்போதுள்ள மின்னணு எந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து நாடு தழுவிய நிலையில் சந்தேகம் உள்ளது. அதை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போதைய தேர்தல் அர்த்தமற்றதாகி விடுகிறது.
பாமக போட்டியிடாவிட்டாலும் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதே நேரத்தில் யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என்றும் பிரசாரம் செய்ய மாட்டோம்.
இடைத் தேர்தலில் பாமக வாக்காளர்கள், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள வாய்ப்பை ('49 ஓ விதி) பயன்படுத்திக் கொள்வார்கள்.
மின்னணு எந்திர சர்ச்சை, இடைத் தேர்தலில் பணம் போன்ற பிரச்சனைகள் அடுத்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்குள் மாறிவிடும் என்று நம்புகிறோம். பொதுத் தேர்தலை புறக்கணிக்க மாட்டோம்.
முல்லைப் பெரியாறு வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோதே தமிழக வழக்கறிஞர் அதை ஏன் எதிர்க்கவில்லை என்று தெரியவில்லை.
இந்த வழக்கில் பாமகவையும் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விரைவில் மனுத் தாக்கல் செய்ய உள்ளோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications