திருமணச் சடங்கில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாட்டம்- சிறுமி பரிதாப சாவு
லக்னோ: திருமணத்தின் போது நடத்தப்பட்ட சடங்கின்போது துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடினர். அப்போது துப்பாக்கி குண்டு துளைத்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தாள். மேலும் ஒரு பெண் குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.
திருவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகளின் போது துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுடும் சடங்குகளை இன்னமும் உலகின் பல்வேறு இடங்களில் செய்து வருகின்றனர்.
இதுபோல லக்னோ, தாக்கர்கஞ்ச் அருகே நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சியின் போது, வானத்தை நோக்கி சுடப்பட்ட துப்பாக்கி குண்டு தவறுதலாக அப்பகுதியில் இருந்த 7 வயது சிறுமியின் உடலில் பட்டு படுகாயம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுமி இறந்தாள். மற்றொரு பெண் குழந்தைக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சடங்கு சம்பந்தப்பட்டது என்பதால் துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்யவில்லை.