வெள்ளத்தில் தவித்து வரும் மக்கள் - ஹாயாக படம் பார்த்த கர்நாடக அமைச்சர்!
ஹூப்ளி: ரோம் நகரமே எரி்ந்து கொண்டிருந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன் கதையாக, வெள்ள பாதிப்பில் மக்கள் மூழ்கியிருக்க அதை தீர்க்கப் போகாமல், 2012 என்ற ஆங்கில படத்தைப் பார்க்கப் போன கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு மீது மக்கள் பெரும் கோபமடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெய்த பெரும் மழையால் கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இதையடுத்து அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று துயர் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் எதியூரப்பா உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், காடக் மாவட்ட பொறுப்பு அமைச்சரான சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மட்டும் காடக் பக்கமே திரும்பிக் கூட பார்க்காமல் இருந்து வருகிறார்.
அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இன்னும் முழுமையாக நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை. அமைச்சர் ஸ்ரீராமுலுவை சந்தித்து முறையிட அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களாக முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர் மக்களிடம் சிக்கவில்லை.
கடைசியாக கடந்த அக்டோபர் 29ம் தேதி மலவாட் என்ற கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கட்டப்படவுள்ள 1200 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மட்டுமே கலந்து கொண்டார் ஸ்ரீராமுலு. அதன் பின்னர் ஆளைக் காணவில்லை.
இப்படி மக்கள் பெரும் அவதியில் மூழ்கியிருக்க, ஹூப்ளியில் உள்ள அப்சரா தியேட்டரில் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஸ்ரீராமுலு பிரளயா 2012 என்ற ஹாலிவுட் படத்தைப் பார்த்து ரசித்துள்ள கதை வெளியில் வந்து மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்களைப் பார்க்க நேரம் இல்லாத மந்திரிக்கு படம் பார்க்க மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என்று கர்நாடக மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
ஆனால் அமைச்சர் ஸ்ரீராமுலு வேறு ஒரு விளக்கத்தை முன்வைக்கிறார். நான் பார்த்த படம் இயற்கைப் பேரிடர் குறித்த படம். இதைப் பார்த்தால், அதிலிருந்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய க்ளூ கிடைக்கிறதா என்பதற்காக இப்படத்தைப் பார்த்தேன் என்கிறார் தில்லாலங்கடியாக.