கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி - அனில் ககோத்கர் தகவல்
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்கும். அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி விரைவில் தொடங்கும் என்று இந்திய அணுசக்தி துறை சேர்மன் அனில் ககோத்கர் கூறினார்.
தூத்துக்குடி அருகே பழையகாயலுக்கு வந்த இந்திய அணுசக்தி துறை தலைவர் அனில் ககோத்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பழையகாயலில் துவக்கப்பட்டுளள ஜிர்கோனியம் காம்பளக்சில் நில அர்ஜிதம், தண்ணீர் வசதிகள் உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி தாமதமாகிறது.
தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த பிளாண்டில் இருந்து 500 டன் ஜிர்கோனியம் டை ஆக்ஸைடும், 250 டன் ஜிர்கோனியம் ஸ்பாஞ்சும் தயாரிக்க முடியும்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 650 டன் ஜிர்கோனியம் ஸ்பான்ஞ் உற்பத்தி செய்ய முடியும். இவை நமது தேவைக்கு அதிகமானதாகவே உள்ளது. இருப்பினும் வருங்காலத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருக்கும். மேலும் பல மின் உற்பத்தி நிலையங்கள் வர வாய்ப்பு உள்ளதால் இது போன்ற தொழிற்சாலைகள் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
உலக அளவில் பல அணு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றுக்கான ஜி்ர்கோனியம் ஸ்பான்ஞ்சின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் எதிர்காலத்தில் நமக்கு இவற்றினை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் உள்ளது. கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி துவக்குவதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அடுத்து வரும் 6 மாத காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கும். அமெரிக்காவுடனான 123 அணுசக்தி ஓப்பந்தம் நல்ல முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.