பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா காங்.கில் சேருகிறார்
மும்பை: சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே காங்கிரஸில் சேருகிறார். இதனால் சிவசேனா வட்டாரம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹூசேன் தல்வி கூறுகையில், ஸ்மிதா காங்கிரஸ் கட்சியில் சேரவிருக்கிறார். அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
எப்போது அவர் சேருவார் என்று கூற முடியாது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளில் அவர் இறங்கி விட்டார்.
பால் தாக்கரேவுக்குப் பின்னர் அக்கட்சியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யாரும் இல்லை என்பதை ஸ்மிதாவின் விலகல் நிரூபிக்கிறது.
தாக்கரே குடும்பத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் காங்கிரஸில் சேருவது முக்கியமான நிகழ்வாகும் என்றார்.
48 வயதாகும் ஸ்மிதா தாக்கரே, சிவசேனா கட்சியில் தான் ஒதுக்கப்பட்டு வருவதால்தான் சிவசேனாவை விட்டு விலக தீர்மானித்ததாக தெரிகிறது.
அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகர் என வேறு முகங்களும் ஸ்மிதாவுக்கு உண்டு. பால் தாக்கரேவின் நிழல் போல அவருடனேயே இருந்துவந்தவர் ஸ்மிதா. ஆனால் தற்போது சிவசேனா கட்சி மராத்தி வெறியுடன் நடக்க ஆரம்பித்திருப்பதால் ஸ்மிதா அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்டுகிறது.