சவூதி அரேபிய மழை பலி 106 ஆக உயர்வு
ரியாத்: சவுதி அரேபியாவில் திடீர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது.
ஜெட்டா, மெக்கா நகர்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, ஆங்காங்கே பாலங்கள், வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் உள்ளன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
இடிபாடுகளிலும், மழை வெள்ளத்திலும் சிக்கி இதுவரை 106 பேர் பலியானதாக பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தண்ணீரிலும், கட்டிடங்களிலும் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மெக்கா செல்லும் நெடுஞ்சாலையில் சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் ஹஜ் பயணிகளும் கணிசமான அளவில் இருந்ததாக தெரிகிறது.
பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. ஆங்காங்கே மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மழை வெள்ளத்தால், டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ஜிட்டா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் சமி பதாவுத் தெரிவித்தார்.