கர்கரே புல்லட் புரூப் மாயம் - விசாரணைக்கு உத்தரவு
மும்பை: ஹேமந்த் கர்கரே அணிந்திருந்த புல்லட் புரூப் உடை மாயமானது குறித்து விசாரணைக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி புல்லட் புரூப் எங்கு போனது என்பதை கண்டுபிடிப்பார்கள்.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர்களுடன் மோத புறப்பட்ட கர்கரே, அநியாயமாக தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் தரமற்றதாக இருந்ததால்தான் தீவரவாதிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் உடலை சல்லடையாக துளைத்தெடுத்தன என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில், கர்கரேவின் புல்லட் புரூப் உடை திடீரென காணாமல் போய் விட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தற்போது விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். குற்றப் பிரிவு போலீஸாரிடம் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம் என்றார்.
சமீபத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கர்கரே அணிந்திருந்த புலல்ட் புரூப் உடை காணாமல் போனதை விட அதைக் கண்டுபிடிக்க முடியாமல் மும்பை போலீஸார் கோட்டை விட்டிருப்பதுதான் மிகவும் வேதனை தருகிறது. இது போலீஸாருக்கு அவமானம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications