மே.வங்கத்துக்கு மத்திய குழு: ராஜ்யசாபாவில் அமளி
அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், அதை ஆய்வு செய்ய மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுவிட்டது.
இந் நிலையில் இன்று அவை கூடியதும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரிக் கட்சிகளும் சமாஜ்வாடிக் கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்தன.
மத்திய அரசுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்பி்க்கள் கோஷம் எழுப்பின.
இரு தரப்பு எம்பிக்களும் அவையில் மையப் பகுதியில் கூடி அமளி செய்ததால் அவையை துணை ஜனாதிபதியும் ராஜ்யசபா தலைவருமான ஹமீத் அன்சாரி ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியதும் பேசிய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மேற்கு வங்கத்துக்கு குழுவை அனுப்புவதில் மத்திய அரசு எந்தத் தவறும் செய்யவில்லை. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்கப் போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.
பொம்மை விவகாரத்துக்குப் பின் (கர்நாடகத்தில் 1994ம் ஆண்டில்முதல்வர் பொம்மையின் ஆட்சியை கலைத்தது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது), ஆட்சிக் கலைப்பை அமல்படுத்தவும் முடியாத நிலை உள்ளது என்றார்.
முன்னதாக இதே அறிவிப்பை லோக்சபாவிலும் ப.சிதம்பரம் வெளியிட்டார்.
வங்காள பந்தில் கடும் வன்முறை:
இந் நிலையில் மேற்கு வங்காளத்தில் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை பந்த் தொடங்கியதும் பாஜகவினர் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ், ரயில் போக்குவரத்தில் பாதிக்கப்பட்டது.
மேலும் பல பஸ்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.