போக்குவரத்து நெரிசல் பெரும் சவால்-கருணாநிதி
சென்னை: போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாகவே உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
சாலை பாதுகாப்பு மற்றும் நகர போக்குவரத்து நிர்வாகம் குறி்த்த 2 நாள் தேசிய கருத்தரங்கம் சென்னை கோட்டையில் இன்று தொடங்கியது. முதல்வர் கருணாநிதி இதை தொடங்கி வைத்து பேசியதாவது:
நம் நாட்டில் சாலை விபத்துகளில் ஏராளமானோர் உயிர் இழக்கிறார்கள். தீவிரவாதம் போன்ற பிற காரணங்களால் உயிர் இழப்பவர்களைவிட சாலை விபத்தில் பலியாவோர் அதிகம் என்பது வேதனை அளிக்கும் விஷயம்.
எனவே சாலை பாதுகாப்பு மற்றும் நகர போக்குவரத்து நிர்வாகம் பற்றிய இது போன்ற கருத்தரங்கம் இந்த நேரத்தில் மிகவும் தேவையானது.
மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சாலைப் பாதுகாப்பும், நகர போக்குவரத்து நிர்வாகமும் முக்கிய தேவைகளாக உள்ளன.
பெரிய நகரங்களில் போக்குவரத்து மிகவும் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்த வரை கடந்த 15 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பாக, 2 சக்கர வாகனங்களின் எண்ணிக்கை, பல மடங்கு அதிகரித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் பெரும் சவாலாகவே உள்ளது.
நாட்டில் 1 மணி நேரத்துக்கு சராசரியாக 13 பேர் விபத்தில் உயிரிழக்கிறார்கள். இதனால் தான் தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் 'பொன்னான நேரம்' என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன் மூலம் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிகிறது.
சாலை பாதுகாப்பு மற்றும் நகர போக்குவரத்து நிர்வாகம் என்ற சவாலான பணியை போலீசார் சிறப்பாக செயல்படுத்தி விழிப்புடன் இருந்து ஒவ்வொரு வரையும் பாதுகாக்க வேண்டும்.
என்றாலும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கேற்ப பள்ளி பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு சாலை போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பொருளாதார வளர்ச்சியுடன் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பான பயணத்திற்கும் நாம் உறுதி அளிக்க வேண்டியது அவசியம்.
வளர்ந்து வரும் நாட்டுக்கு சாலைகள் தான் வளமையின் உயிரோட்டமாக உள்ளன. ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.எனவே இது தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்க நாடு முழுவதும் இருந்து வந்துள்ள நிபுணர்களை நான் வரவேற்கிறேன் என்றார்.
முன்னதாக தமிழக போலீஸ் 150வது ஆண்டு நிறைவு தபால் தலையை தமிழக தலைமை தபால் அதிகாரி சக்கரவர்த்தி வெளியிட முதல்வர் பெற்றுக் கொண்டார்.
150வது ஆண்டு விழா மலரை முதல்வர் வெளியிட தலைமை செயலாளர் ஸ்ரீபதி பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications