சுங்கச்சாவடியில் திமுகவினர் வன்முறை
சென்னை: சென்னை பெருங்குடியில் உள்ள சுங்கச்சாவடியில் திமுக செயலாளரின் ஆதரவாளர்கள் திடீரென புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
பெருங்குடி, ராஜீவ் காந்தி சாலையில் சுங்கச்சாவடி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் தாசில்தார் மதிவதனி, வருவாய் அதிகாரி சரவணன் ஆகியோர் அவ்வழியே காரில் சென்றனர்.
சுங்கச்சாவடியில் வாகனத்துக்கு கட்டணம் கேட்டபோது, தாங்கள் அரசு ஊழியர்கள் என்றும், கட்டணம் செலுத்தத் தேவையில்லை என கூறியுள்ளனர். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை அறிந்ததும் பெருங்குடி திமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் வந்து அரசு அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசினார்.
மாலையில் அதே வழியில் திரும்பும் போது, மீண்டும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பணம் கேட்டதால் மறுபடியும் திமுக பேரூர் செயலாளர் ரவிச்சந்திரன் தலையிட்டு அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு அதிகாரி கண்ணனிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் புகார் செய்துள்ளனர். அவருடைய அறிவுறுத்தலின்படி, துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
அரசு அதிகாரியான மதிவதனி வரி கட்ட மறுத்ததாகவும், திமுக செயலாளர் ரவிச்சந்திரன் தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் தரப்பட்டது. இதனால், துரைப்பாக்கம் காவல் நிலையத்துக்கு வருமாறு ரவிச்சந்திரனிடம் போலீசார் கூறியுள்ளனர்.
இதையடுத்து, திமுக செயலாளரின் ஆதரவாளர்கள் பெருங்குடி சுங்கச்சாவடி அலுவலகத்துக்கு சென்றனர். வாகனத் தடைகளை விலக்கி விட்டு, சவுக்கு கட்டை மற்றும் கம்பிகளால் தாறுமாறாக தாக்கினர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் வாகனங்கள் சுங்கவரி ஏதும் கட்டாமல் இரு புறங்களிலும் சென்றதாகக் கூறப்படுகிறது.
துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி இன்ஸ்பெக்டர் கவுதம் ஆகியோர் அங்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications