ராஞ்சி சிறையில் மதுகோடா-உ.பி.யிலும் கைவரிசை அம்பலம்

ராஞ்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, ஏராளமான போலி நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார்.
தான் சேகரித்த பணத்தை பதுக்குவதற்காக போலியாக நிறுவனங்களை உருவாக்கி, இல்லாத நிறுவனங்களின் பேரில், அரசு ஒப்பந்தப் பணிகளைப் பெற்று பல நூறு கோடி ரூபாயை மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
போலி நிறுவனங்களின் பெயரில் உத்தரப் பிரதேச அரசுப் பணிகளை அடுத்தடுத்து ஒப்பந்தத்தில் எடுத்துள்ளார் மதுகோடா. கடைந்தெடுத்த ஊழல்வாதிகளும், குற்றப்பின்னணி உள்ளவர்களும் அரசியல் நடத்திவரும் உ.பி போன்ற பெரிய மாநில விவகாரத்தில் மதுகோடா விளையாடியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம், ஜாலுவான் மாவட்டத்தில் பாலிடெக்னிக் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதியில் கோடாவின் போலி நிறுவனம் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. அடுத்த 10 நாட்களில், ரூ.300 கோடி மதிப்பிலான பல்கலைக் கழக கட்டுமானப் பணி, ரூ.40 கோடி மதிப்பிலான சாலைப் பணி ஆகியவற்றையும் அதே நிறுவனம் பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ரூ.190 கோடி மதிப்பிலான கல்லூரி கட்டுமானப் பணி ஒப்பந்தம் மீண்டும் அதே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச அதிகாரிகள் மட்டத்தில் ஒத்துழைப்பு இல்லாமல் இவற்றை சாதிப்பது கடினம். எனவே அங்கும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதற்கிடையே, நேற்று மனைவி கீதாவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய புறப்பட்ட நேரத்தில் கைது செய்யப்பட்ட மதுகோடாவை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் மதுகோடா அடைக்கப்பட்டுள்ளார்.
மதுகோடா ஊழலுக்கு உடந்தையாக இருந்த கமலேஷ்குமார் சிங்கையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்துள்ளனர். இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மதுகோடா, தனது மெகா ஊழலுக்கு காரண கர்த்தாக்கள் என 5 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அடையாளம் காட்டியிருப்பதாக தெரிகிறது. அதில் மூன்று பேர் தற்போது பணியில் இருப்பவர்கள். சம்பந்தப்பட்ட அதிகார்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications