மன்மோகன் சிங் மகளுக்கு சமூக அறிவியலுக்கான இன்போசிஸ் பரிசு
சமூக அறிவியல் துறையில் சிறப்பாக செயல்படுவோரை ஊக்குவிப்பதற்காக புதிய பரிசு ஒன்றை உருவாக்கியுள்ளது இன்போசிஸ் நிறுவனம். முதல் விருதினை உபிந்தர் சிங்கும், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த அபிஜித் வினாயக் பானர்ஜியும் இணைந்து பெறுகிறார்கள்.
50 வயதாகும் உபிந்தர் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், உபிந்தர் சிங், பிரதமரின் மகள்தான். இருப்பினும் அவருடைய தகுதி மற்றும் திறமைகளை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் பரிசுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எனவேதான் பிரதமரின் மகள் என்று அவரை நாங்கள் அறிமுகப்படுத்தவில்லை என்றார்.
நோபல் பரிசு வென்ற அமார்த்யா சென்னை தலைவராகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தின் இன்போசிஸ் அறிவியல் கழகம் இந்தப் பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்துள்ளது.
இந்தப் பரிசு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டது. இதை உபிந்தரும், பானர்ஜியும் தலா ரூ. 25 லட்சமாக பகிர்ந்து கொள்வார்கள்.
சிறந்த வரலாற்றியலாளராக உபிந்தரும், வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கையில் ஆற்றிய சிறப்பான பணிக்காக பானர்ஜியும் இந்தப் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 4ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் உபிந்தருக்கும், பானர்ஜிக்கும் பரிசினையும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தையும் வழங்குவார்.