நெல்லை மாவட்டத்தில் 4,000 பேருக்கு எய்ட்ஸ்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேர் எச்ஐவி - எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கில் தெரிவி்க்கப்பட்டது.
உலக எய்ட்ஸ் தினம் ஓவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு நெல்லையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு நடந்தது.
நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து துவங்கிய மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்தார். அங்கிருந்து நெல்லை சந்திப்பு தட்கோ சமுதாய நலகூடத்தை பேரணி வந்தடைந்தது.
கருத்தரங்கில் அதிகாரிகள் பேசுகையில்,
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 753 நம்பிக்கை மையங்கள் எய்ட்ஸ் நோயை தடுக்கும் பணியில் செயல்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் 37 நம்பிக்கை மையங்கள் மூலம் இதுவரை 13 ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஏஆர்டி மையம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்கள் அரசு மருத்துவமனையில் பதிவு செய்கின்றனர். இதில் 99 சதவீதம் கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பரிசோதனை செய்யப்படுகிறது.
2005ம் ஆண்டில் இருந்து இதுவரை 250 எச்ஐவி தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் எச்ஐவி பரிசோதனை செய்வதன் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுவதை தடுக்க முடியும் என்றனர்.












Click it and Unblock the Notifications