அவசரகால பட்டனை அழுத்தி பயணிகளுடன் உயிருடன் விளையாடிய ஜெட் ஏர்வேஸ் விமானம்

கடந்த அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்துள்ளது. இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் டெல்லியிலிருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்தது. கிட்டத்தட்ட தரையிலிருந்து 3700 அடியில் விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது விமானியின் பின்புறம் அமர்ந்திருந்த சோதனை பைலட், அவசர கால பட்டனை அழுத்தினார்.
அவசர காலத்தில் விமானி எப்படி செயல்படுகிறார் என்பதை அறிவதற்காக இவ்வாறு செய்தார் சோதனை பைலட்.
இப்படி பட்டனை அழுத்தியதால் விமானம் தரையிறங்க உதவி செய்யும் கருவிகள் இயங்கவில்லை. ரன்வே நிலவரத்தை அறிவிக்கும் எச்சரிக்கைக் கருவிகளும் செயல்படவில்லை.
அப்போது விமானம் வழக்கமான வேகத்தை விட அதிக வேகத்தில் வந்து கொண்டிருந்ததாம். மேலும் அந்தேரி, ஜரிமரி மலைப் பகுதிக்குப் பின்புறம் விமானம் பறந்து கொண்டிருந்தது.
இப்படிக் குழப்பமான நிலை ஏற்பட்டபோதிலும் அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்ததால், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் வி்மானம் பத்திரமாக தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்து தற்போது ஜெட் ஏர்வேஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
விமானம் பயணிகளுடன் பறக்கும்போது அவசர காலத்திற்குப் பயன்படும் சர்க்யூட் பிரேக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று விமானத் தயாரிப்பு நிறுவனங்களான போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகியவை கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள போதிலும் அதை மீறி இந்த சோதனை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமானம் எந்தவிதப் பிரச்சினையையும் சந்திக்காமல் தரையிறங்கியபோதிலும், விதி மீறல் இருப்பதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அதேபோல சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications