தஞ்சையில் பலத்த மழை- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்தது. காரைக்காலில் அதிகபட்சமாக 12 செமீ மழை பெய்துள்ளது. திருவாரூர், சீர்காழியில் தலா 7 செமீ மழை பதிவானது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
வங்ககடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது தென்மேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி குமரிக்கடல் முதல் இலங்கை வரை பரவியுள்ளது.
இதன் காரணமாக நாகப்பட்டினம், தரங்கம்பாடி, நன்னிலம், திருவாரூர், திருத்துறைபூண்டி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன.
கிராமப்பகுதிகளில் மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என மாவட்ட கலெக்டர் சண்முகம் அறிவித்துள்ளார்.
இதே காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்தால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல் தெரிவித்துள்ளது.
இன்றைய மழை அளவு..
காரைக்காலில் அதிகபட்சமாக 12 செமீ மழை பெய்துள்ளது. திருவாரூர், சீர்காழியில் தலா 7 செமீ மழை பதிவானது.
கடலூர், ராமேஸ்வரம் தலா 6, நன்னிலம், நாகை தலா 5, பாம்பன், சாத்தானகுளம் தலா 4, அண்ணா பல்கலைக்கழகம், டிஜிபி அலுவலகம், பூந்தமல்லி, திருவிடைமருதூர், திருவையாறு, வல்லம், மயிலாடுதுறை, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருச்செந்தூர் தலா 3 செமீ மழை பதிவானது.
ஸ்ரீபெரும்புதூர், சோழவரம், சிதம்பரம், காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை, கும்பகோணம், குடவாசல், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், கொல்லிடம், தரங்கம்பாடி, முதுகுளத்தூர், தொண்டி, ஜெயங்கொண்டம் தலா 2 செமீ மழை பதிவானது.
சென்னை விமான நிலையம், காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம், சேத்தியாதோப்பு, ஓரத்தநாடு, பாபநாசம், மன்னார்குடி, முத்துப்பேட்டை, வேதாரன்யம், திருவாடானை, தூத்துக்குடி, குழித்துரை, தக்கலை, செய்யாறு, சேந்தமங்கலம், ஏற்காடு, அரியலூர், இளையாங்குடி தலா 1 செமீ மழை பெய்துள்ளது.