துபாயில் பதுங்கியுள்ள கோடா உதவியாளரைப் பிடிக்க வலை
டெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவின் உதவியாளர் துபாயில் பதுங்கியுள்ளார். அவரைப் பிடிக்க அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரூ. 4000 கோடி ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் மது கோடா. இந்த நிலையில் அவரது உதவியாளர் சஞ்சீவ் செளத்ரி என்பவர் துபாயில் பதுங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
கோடாவின் அத்தனை கோல்மால் வேலைகளுக்கும் பேருதவியாக இருந்தவர் இந்த செளத்ரி என்று அமலாக்கப் பிரிவினர் கருதுகின்றனர்.
கோடா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுமே செளத்ரி துபாய்க்கு ஓடி விட்டார். அவர் அங்கு நிரந்தர தங்கும் உரிமை வைத்திருப்பதாக தெரிகிறது. மது கோடாவின் ஹவாலா மற்றும் வெளிநாட்டு முதலீட்டு நடவடிக்கைகளை இவர்தான் தலைமையேற்று நடத்தி வந்துள்ளார்.
அமலாக்கப் பிரிவினர் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பிடியில் சிக்காமல் தப்பியுள்ள செளத்ரியைப் பிடிக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதையடுத்து அவரைக் கைது செய்ய கோர்ட் மூலம் வாரண்ட் பெற நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், துபாயிலிருந்து வேறு நாட்டுக்கு அவர் தப்பிச் சென்று விடாமல் தடுக்க துபாய் அரசையும் தொடர்பு கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications