சென்னை அண்ணா சாலை-செனடாப் சாலை சந்திப்பில் மூப்பனாருக்கு சிலை
இதுகுறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,
சென்னை மாநகராட்சி மன்ற எதிர்க்கட்சித் தலைவர் சைதை பி.ரவி, மாநகராட்சி ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், சென்னை அண்ணா சாலை மற்றும் செனடாப் சாலை சந்திப்பில், செனடாப் சாலை நடுவில் உள்ள தீவில், மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் முழு உருவ வெண்கல சிலையை தனது செலவில் நிறுவிடவும், நிறுவிய பின் சிலையின் பராமரிப்பு முழுவதும் அவரே ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான அரசின் அனுமதியையும் கோரியிருந்தார்.
இது தொடர்பாக அரசுக்கு, மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் ஆகியோர், செனடாப் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திப்பில் உள்ள செனடாப் சாலையின் நடுவே உள்ள சாலை தீவை மேலும் விரிவுபடுத்தக் கூடாது. சிலையானது சாலை தீவின் உட்புறம் மட்டுமே நிறுவவேண்டும் என நிபந்தனை விதித்து தடையில்லா சான்றினை அளித்தனர்.
அதன்பிறகு, சென்னை மாவட்ட கலெக்டரும், சிலையை நிறுவுவது குறித்த முன்மொழிவுகளை பரிந்துரை செய்தார். இவற்றின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள, சிலைகள் நிறுவும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன், சென்னை மாநகராட்சி மன்ற தீர்மான ஒப்புதலின்படியும் மற்றும் இதர துறையினரின் அனுமதியுடனும், செனடாப் சாலையில் மூப்பனாரின் முழு உருவ வெண்கல சிலையை நிறுவ, சைதை ரவிக்கு அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.