திரிகோணமலை, மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்புக்கு தயாராகும் இலங்கை அரசு

போரினால் இங்கிருந்து இடம் பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் குடியேறுவதற்கு முன்பாகவே, அவசர கதியில் இந்த நடவடிக்கைகளை முடிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
'இலங்கையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள்' என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் இலங்கையின் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில்,
'இலங்கையின் வட கிழக்கு பகுதிகளில் விவசாய உற்பத்தி மற்றும் தொழில் முதலீடுக்கு உகந்த ஏராளமான நிலங்கள் மிகுதியான அளவில் அரசால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உணவுப் பொருள் உற்பத்தி செய்வதற்காகவும், நவீன விவசாய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், இதர தொழில் முதலீட்டுக்கும் இவை பயனுடையதாக இருக்கும். எனினும் விவசாய தொழில் முதலீட்டுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் இருந்து தீவிரவாதத்தை அப்புறப்படுத்தியதை அடுத்து, அந்த பகுதிகள் சுற்றுலாவுக்காகவும், சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளும் இந்திய முதலீடுக்காகவும் தற்போது திறந்துவிடப்படுகிறது.
திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகறை, நிலவேலி, அருகம்பை போன்ற இடங்கள் முதலீட்டுக்கு உகந்த இடங்களாகும். வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வசதியான முறையில் அரசாங்க நடைமுறைகள் தளர்த்தப்பட்டு, ஒப்புதல் வழங்கும் பணிகள் துரித கதியில் முடித்துத் தரப்படும்' என்றார்.
இலங்கை அரசு வடகிழக்குப் பகுதியில் தொழில் வாய்ப்புகளை பெருக்குகிறோம் என்ற பெயரில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும், வளங்களை அபகரிக்கவும் திட்டமிடுவதாக தமிழர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இலங்கை துணைத் தூதர் குறிப்பிடும் பகுதிகள் தமிழர்களின் பாரம்பரியத்தோடு தொடர்புடையவையாக கருதப்படுகிறது. இவ்விடங்களில் முதலீட்டாளர்களை அனுமதித்து பழைய அடையாளங்களை சிதைக்கும் குரூர புத்தியும் இதில் பிரதிபலிப்பதாக இலங்கை தமிழர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், இப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்னும் முழுமையாக மீண்டும் குடியேறவில்லை. அதற்குள்ளாகவே முதலீட்டாளர்களுக்கு நிலங்களை ஒதுக்கும் பணியில் அரசு மும்முரம் காட்டுகிறது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் தமிழர் பகுதிகள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ஐநாவும் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியது. இந்நிலையில் அரசின் இப்புதிய நடவடிக்கைகளின் விளைவுகள் எப்படி இருக்குமோ என்ற அச்சம் இலங்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications