For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'பாலு மீதான வழக்கு வாபஸ் ஏன்?'-உயர்நீதிமன்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஜெயலலிதா ஆட்சியின்போது நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, டி.ஆர்.பாலு மீது தொடரப்பட்ட கிரிமினல் வழக்கை ஏன் அப்போதைய அரசு கைவிட்டது என்று தற்போது சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

2001ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி நள்ளிரவு அப்போதைய ஜெயலலிதா ஆட்சியின்போது கருணாநிதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அப்போது நடந்த பரபரப்பான சம்பவத்தின்போது அப்போதைய மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் போலீஸ் அதிகாரிகளுடன் கடுமையாக வாதிட்டனர்.

ஒரு முன்னாள் முதல்வரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து எப்படி அவரைக் கைது செய்யலாம் என்று கூறி கடுமையாக வாதிட்டனர்.

இதையடுத்து போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி இருவர் மீதும் கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் சில நாட்களில் அந்த வழக்குகள் கைவிடப்பட்டன.

இந்த நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து தனித் தனியாக 2 ரிட் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

மனுதாரர்களில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த துவாரகநாதன் என்பவர் இதுதொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுவில், வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும்போது இரு அமைச்சர்களும் போலீஸ் அதிகாரிகளையும், போலீஸாரையும் தாக்கியுள்ளது உறுதியாகத் தெரிய வருகிறது. மேலும், அவர்களின் கடமைகளைச் செய்ய விடாமல் தடுத்துள்ளதும் தெளிவாகத் தெரிகிறது.

இவர்களின் தாக்குதலில் அப்போதைய ஐஜி முகம்மது அலி மற்றும் பல கான்ஸ்டபிள்கள் காயமடைந்தனர். அன்றைய மத்திய அரசிடமிருந்து வந்த நெருக்குதல் காரணமாக மத்திய அமைச்சர்கள் இருவர் மீதான வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற்றுள்ளது.

போலீஸ் விசாரணையில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் விசாரணை நடத்த வேண்டியது காவல்துறையின் கடமையாகும். ஆனால் இதுபோன்ற அழுத்தங்களுக்குப் பணிவதன் மூலம், தவறு செய்த அமைச்சர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப மாநில அரசு வழி வகுத்து விட்டது.

அரசின் இந்த முடிவால் காவல்துறையின் தார்மீக பின்னடைவு ஏற்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்குகள் கடந்த எட்டு வருடங்களாக நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் நீதிபதிகள் முகோபாத்யாயா, துரைசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் பூர்ணிமா தனது தரப்பு வாதத்தை வைத்தார். அதையடுத்து 2001ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி முரசொலி மாறன், பாலு மீதான வழக்குகளை வாபஸ் பெறும் உத்தரவை அரசு பிறப்பித்தது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் உள்துறை செயலாளர், டிஜிபி, சென்னை போலீஸ் கமிஷனர், சிபிசிஐடி இயக்குநர் ஆகியோர் அடுத்த வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணை டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X