வேதாரண்யம்: குளத்தில் பள்ளி வேன் கவிழ்ந்து 9 குழந்தைகள்-ஆசிரியை பலி

கலைவாணி நர்சரி பள்ளிக்குச் சொந்தமான இந்த வேன் 25 மாணவ, மாணவிகள் மற்றும் இரு ஆசிரியைகளுடன் சென்று கொண்டிருந்தது. கரியாப்பட்டினம் பகுதியில் உள்ள கத்திரிப்புலம் என்ற இடத்தில் சென்றபோது அங்குள்ள காமாட்சியம்மன் குளத்தில் கவிழந்து மூழ்கியது.
இதில் 5 மாணவிகள், 4 மாணவர்கள் உள்பட 9 குழந்தைகள் குளத்தில் மூழ்கி பலியாயினர். ஒரு ஆசிரியையும் பலியானார். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 11 குழந்தைகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குளத்தில் மற்ற குழந்தைகளையும் இன்னொரு ஆசிரியையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குளத்து நீரை மோட்டார் மூலம் இறைத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
தப்பியோடிய டிரைவர்:
வேன் குளத்தில் மூழ்கிய போது வேன் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோர் நீந்துத் தப்பித்தனர். ஆனால், அங்கிருந்து அவர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வேனை ஓட்டி வந்த டிரைவர் மொபைல் போனில் பேசிக்கொண்டே வந்ததாக வேனில் இருந்த மாணவர்கள் கூறியுள்ளனர்.
நிவாரணம் அறிவிப்பு:
பலியான குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000மும் பலியான ஆசிரியையின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சமும் நிவாரண உதவி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இந் நிலையில் இறந்த குழந்தைகளின் உடலில் போஸ்ட்மார்ட்டம் நடத்தக் கூடாது என்று பெற்றோர் கோரினர். ஆனால், மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே கொடுப்போம் என்று போலீசார் கூறிவிட்டனர்.
மரத்தில் மோதிய வேன்-20 மாணவர்கள் காயம்:
இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் பள்ளி வேன் விபத்தில் சிக்கியது.
30 மாணவர்களுடன் சென்ற சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வேன் படுவேகத்தில் சென்றதால் நிலை குலைந்து நரிக்குறவர் காலனி அருகே நிலைதடுமாறிய மரத்தில் மோதியது.
இதில் 20 மாணவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications