எங்க எதிரி அனிதா ராதாகிருஷ்ணன்தான் - ஓ.பி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் இடைத் தேர்தலில் அதிமுகவின் பொது எதிரி கருணாநிதி அல்ல. மாறாக அனிதா ராதாகிருஷ்ணன்தான் என்று கூறியுள்ளார் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம்.
திருச்செந்தூரில் சட்டசபை இடைத்தேர்தல் பணிகள் குறித்த அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் கூறுகையில்,
அதிமுக தொண்டர்களின் உழைப்பும், கட்சி சின்னமும் நமக்கு வெற்றியைத் தேடித்தரும். இத்தேர்தலில் நமக்கு பொது எதிரி முதல்வர் கருணாநிதி அல்ல; அம்மாவுக்கு துரோகம் செய்து கட்சி மாறி இங்கு திமுக வேட்பாளராக போட்டியிடும் அனிதா ராதாகிருஷ்ணன் தான் நமது முதல் எதிரி.
அனிதா ராதாகிருஷ்ணன் செய்த துரோகத்தால் இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அவருக்கு தொண்டர்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் புகட்டும் பாடத்தின் மூலம், இனி எவரும் அம்மாவுக்கு துரோகம் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படவேண்டும்.
மின்னணு ஓட்டு இயந்திரத்தில் அதிகாரிகள் துணையுடன், தி.மு.க. வினர் முறைகேடு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே ஓட்டுப்பதிவு அன்று அதை நாம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
அழகிரி ஸ்டைலில் செயின் பரிசு...
இத் தொகுதியில், கட்சி சார்பில் 47 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிக ஓட்டுக்களை வாங்கித் தந்து முதலிடம் பிடிப்பவருக்கு ஐந்து சவரன் தங்கச் செயினும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு மூன்று சவரன் தங்கச் செயினும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு இரண்டு சவரன் தங்கச் செயினும் அம்மாவின் கையால் வழங்கப்படும். எனவே, நமது வேட்பாளர் வெற்றி பெற கடுமையாக உழையுங்கள் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
சமீபத்திய ஐந்து தொகுதி இடைத் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரும் மாவட்ட செயலாளர்களுக்கு தங்கச் சங்கிலி தருவதாக மு.க.அழகிரி கூறியிருந்தார். தற்போது அதே பாணியில் அதிமுகவும் செயின் தர இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications