தனி தெலுங்கானா-காங்கிரசும் களமிறங்குகிறது
ஹைதராபாத்: தனி தெலுங்கானா கோரிக்கை குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வரும் தனி தெலுங்கானா கோரிக்கை, தற்போது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகரராவின் போராட்டத்தால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனித் தெலுங்கானா பிரச்சினை குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு கமிட்டி ஒன்றை அப்போதைய நிதி அமைச்சரும், தற்போதைய முதல்வருமான ரோசய்யா தலைமையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இது இன்னும் தொடங்கப்படாத நிலையிலேயே உள்ளது.
இது குறித்து ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ் கூறுகையில், இந்த ஆய்வுக்கமிட்டியை புதுப்பிக்கவேண்டும். இதில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படவேண்டும். இந்த கமிட்டியின் மூலம் 5, 6 மாதங்களில் அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்பிக்கலாம்.
அப்போதும் தனி தெலுங்கானா குறித்து மத்திய அரசு திருப்தியடையவில்லை என்றால் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்கலாம்' என்று தெரிவித்தார்.
மீண்டும் தீ்க்குளிப்பு:
தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவை கைது செய்தபோது அவரின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தி்ன் போது தீ்க்குளித்த தொண்டர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரீம் நகர் அருகே எல்.பி நகர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் (28) என்ற தொண்டர் தீக்குளித்தார்.
உடலில் 70 சதவீதம் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.