இந்தியாவில் பொன்சேகா-ரகசிய பயணம்
மும்பை: முன்னாள் இலங்கை கூட்டுப் படைத் தலைவரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான சரத் பொன்சேகா திடீரென இந்தியா வந்துள்ளார்.
தனிப்பட்ட முறையிலான பயணமாக வந்துள்ளதாக பொன்சேகா தரப்பு கூறினாலும் அவர் வெளியுறவுத்துறை மற்றும் இந்திய உளவுப் பிரிவின் முக்கிய அதிகாரிகளுடன் ரகசிய பேச்சு நடத்தலாம் என்று தெரிகிறது.
நேற்றிரவு இந்தியா வந்த அவர் நாளை கொழும்பு திரும்பவுள்ளார்.
நேராக மும்பை வந்த அவர் அங்கு யாரை சந்தித்தார் என்று தெரியவில்லை. பின்னர் அவர் பிகாரில் உள்ள புத்தரின் பிறப்பிடமான புத்த கயாவுக்கும் செல்கிறார். அங்கிருந்து டெல்லி சென்று சிலரை சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது.
தனது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ராஜபக்சேவுக்கு உத்தரவிடுமாறு அவர் இந்தியத் தலைவர்களிடம் கோரலாம் என்று தெரிகிறது.
அதிபராகத் தேர்ந்தெடு்க்கப்பட்டால் புலிகளுக்கு எதிரான போரில் இந்திய அரசு 'அரசியல் மற்றும் தார்மீக உதவிகள்' வழங்கியதால் இந்தியாவுடன் நட்பைப் பேணுவேன் என்று பொன்சேகா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடனான போர் முடிந்த பி்ன் அதிபர் ராஜபக்சேவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையே மோதல் எழுந்தபோது இந்தியப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு ராஜபக்சே கேட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டிய பொன்சேகா, அது இலங்கை ராணுவத்துக்கு அவமானம் என்றும் கூறியிருந்தார்.
மேலும் சமீபத்தில் ராஜபக்சே-பொன்சேகா இடையே நேரடியாக மோதல் வெடித்தபோது வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்புக்கு ஓடிப் போய் சமாதானத்திலும் ஈடுபட்டார்.
அதிபரானால் பொன்சேகா சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்று இந்திய வெளியுறவு வட்டாரங்களில் அச்சம் நிலவி வருகிறது. இந்த அச்சத்தைப் போக்கவே அவர் இந்த திடீர் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வாக்களிக்கவுள்ள 11,000 புலிகள்:
வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 11,000 விடுதலைப் புலிகளும் வாக்களிக்க உள்ளனர்.
அவர்களும் வாக்களிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை தேர்தல் ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ார்.
2,000 பெண் புலிகள் உள்ளிட்ட 11,000 விடுதலைப் புலிகள் 17 முகாம்களில் கைது செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 3 நிரந்தர தடுப்பு முகாம்கள் ஆகும்.
இந்த முகாம்களில் புலிகள் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
குடும்ப ஆதிக்கத்தை விரட்ட ரணில் அழைப்பு:
இந் நிலையில் நாட்டில் அதிபர் ராஜபக்சே குடும்ப ஆதிக்கத்தை விரட்டியடிப்பதற்கும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் நேர்மையான யாரும் என்னுடன் இணையலாம் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், ராஜபக்ஷவின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பெருமளவில் ஊழல்கள் மோசடிகள் நடந்து வருகின்றன.
ஜெனரல் சரத் பொன்சேகா யுத்தகளத்தில் நின்றபோது தேசப்பற்றாளராக வர்ணிக்கப்பட்டார். இன்று தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த காரணத்தினால் அவரை ராஜபக்சே தேசத் துரோகியாக வர்ணிக்கிறார்.
அதே நேரத்தில் புலிகளின் சர்வதேச தொடர்பாளர் கே.பியை தேசப்பற்றாளராக அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருப்பது வேடிக்கை என்றார் ரணில்.