தமிழகம், புதுச்சேரியில் மழை மேலும் நீடிக்கும்
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், 'இலங்கையின் மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருகிறது. இதன் தாக்கம் தெற்கு ஆந்திர கரையோரம் வரை நீடித்துள்ளது.
இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் தெற்கு பகுதியில் மழை நீடிக்கும். தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வரை 5ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மழை பெய்யும்' என்றார்.
தமிழக கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. நேற்று வல்லத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 34.2 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 4.7 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.
10 மாவட்டங்களில் அதிக மழை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காலத்தில் 10 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 860 மி.மீ. மழை பெய்துள்ளது. இது எப்போது இல்லாத அளவாக 30 சதவீதம் கூடுதல்.
இதே போல் நீலகிரியில் 820 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும், கடலூர், திருவாரூர், திருநெல்வேலி, தஞ்சாவூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் மழை பெய்துள்ளது.
சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, விருதுநகர் ஆகிய இடங்களில் இயல்பான அளவே மழை பெய்துள்ளது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இயல்புக்கு குறைவான அளவு மழையே பதிவாகியுள்ளது.
சென்னை ஏரிகளின் நிலவரம்:
சென்னை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம் பாக்கம், வீராணம் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
புழல் ஏரியில் 12.69 அடி, பூண்டி ஏரியில் 32.58 அடி, சோழவரம் 14.06 அடி, செம்பரம்பாக்கம் 15.17 அடி, வீராணம் ஏரியில் 13.40 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
சென்னைக்கு குடிநீ்ர் வழங்கும் இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு தற்போது 7186 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.