இந்தியாவை தாக்க லஷ்கருக்கு அல்-கொய்தா உதவி: யுஎஸ்
வாஷிங்டன்: இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு அல் கொய்தா அமைப்பு உதவி வருவதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டத்தைத் தூண்டி இரு நாடுகளையும் மோத விடுவதற்காக லஷ்கரை தூண்டி விட்டு உதவிகளைச் செய்து வருகிறது அல் கொய்தா என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி முன்பு அவர் பேசுகையில், இந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்கு, லஷ்கர் இ தொய்பாவுக்கு அல் கொய்தா உதவி வருகிறது. முக்கியத் தகவல்கள், இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்டவற்றை லஷ்கர் இ தொய்பாவுக்கு அல் கொய்தா அளிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதி நிலவக் கூடாது. இரு நாடுகளிடையேயும் மோதலை ஏற்படுத்த வேண்டும், பாகிஸதான் சீர்குலைய வேண்டும் என்பதே அல் கொய்தாவின் எண்ணம்.
லஷ்கருடன் மட்டுமல்லாது பாகிஸ்தான் தலிபான் அமைப்பான தெஹரீக் இ தலிபானுக்கும் அல் கொய்தாதான் உதவி வருகிறது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தாக்குதல்களை அல் கொய்தாதான் தெஹரீக் இ தலிபானுக்கு வகுத்துக் கொடுத்து தாக்குதலை நடத்தி வருகிறது. அரசை நிலை குலைய வைக்க இவ்வாறு செயல்படுகிறது அல் கொய்தா.
தொழில்நுட்பத் தகவல்கள், தார்மீக ஆதரவு உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் இந்த இரு தீவிரவாத அமைப்புகளுக்கும் அல் கொய்தா செய்கிறது.
அதேபோல ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கும் அல் கொய்தா பல்வேறு வழிகளில் உதவிகள் செய்து வருகிறது.
கடந்த ஆண்டு இருந்ததை விட தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நிலைமை மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மட்டுமல்லாமல், இந்தப் பிராந்தியம் முழுவதுமே நிலை குலைந்து போக வேண்டும் என்பதே அல் கொய்தாவின் திட்டமாக உள்ளது.
தற்போது இந்தப் பிராந்தியத்தில் நடந்து வரும் அனைத்துத் தீவிரவாத செயல்களுக்கும் மூளையாக, இதயமாக இருப்பது அல் கொய்தா அமைப்புதான். தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கக் கிளம்பினால் அதன் வேர் ஆப்கன்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போய் நிற்பதைப் பார்க்க முடிகிறது.
இங்கு மட்டுமல்லாமல் அமெரிக்காவாகட்டும், சோமாலியாவாகட்டும், இங்கிலாந்தாகட்டும், உலகின் எந்தப் பகுதியாக இருக்கட்டும். அனைத்து தீவிரவாத தாக்குதல் மற்றும் சதித் திட்டங்களில் அல் கொய்தாதான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா புற முதுகு காட்டி விடக் கூடாது. அல் கொய்தா, தலிபான்களை அழிக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பாகி்ஸ்தான் படையினரும், ஸ்வாத் பள்ளத்தாக்கு, வசிரிஸ்தான் ஆகிய பகுதிகளில் தலிபான்களை அழிப்பதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்த முயற்சிகளை அமெரிக்கா சரியாக பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் தலைவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நடக்க வேண்டும் என்றார் கேட்ஸ்.












Click it and Unblock the Notifications