26/11: ஹெட்லி, ராணா தொடர்பு குறித்த தகவலுடன் எப்.பி.ஐ குழு டெல்லி வருகை
பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான தாவூத் கிலானி என்கிற ஹெட்லியும், பாகிஸ்தானில் பிறந்த கனடியரான ராணாவும், இந்தியா மற்றும் டென்மார்க்கில் தீவிரவாத வேலைகளை நிகழ்த்த லஷ்கர் இ தொய்பா அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாக கூறி கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மும்பையில் கடந்த ஆண்டு நடந்த வெறித்தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது பற்றி பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக எப்.பி.ஐ. வட்டாரத்த் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும் இதுகுறித்து எப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில் அதிபர் ஒபாமாவின் உத்தரவுப்படி ஹெட்லி- ராணா விசாரணை குறித்த தகவல்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்வதற்காக எப்.பி.ஐ குழு ஒன்று இந்தியா வந்துள்ளது.
ராணா, ஹெட்லியை விசாரிக்க இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அமெரிக்கா சென்றிருந்தனர். ஆனால் அதற்கு அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் நாடு திரும்பி விட்டனர்.
இதையடுத்து அமெரிக்கா சென்றபோது அதிபர் ஒபாமாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து விவாதித்தார். இதையடுத்து எப்.பி.ஐ. குழுவை டெல்லி சென்று ஹெட்லி- ராணா விசாரணை குறித்து இந்தியாவிடம் விளக்க ஒபாமா உத்தரவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.
அதன்படியே தற்போது எப்.பி.ஐ. குழு டெல்லி வந்துள்ளது. இக்குழுவினர் இன்று இந்தியத் தரப்பிடம் ஆலோசனை மேற்கொள்கின்றனர். அப்போது முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த சமயத்தில், ஹெட்லிக்கும், ராணாவுக்கும் மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களையும் இந்தியாவிடம் எப்.பி.ஐ. வழங்கும் எனத் தெரிகிறது.