வெள்ளம்: நீலகிரிக்கு உதவி: வேலூர் எம்பி கோரிக்கை
டெல்லி: நீலகிரியில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவிகளையும் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வேலூர் எம்.பி அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
இயற்கைப் பேரரிடர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று அப்துர் ரஹ்மான் பேசியதாவது:
சமீபத்தில் நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பெரும் பாதிப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
நீலகிரி பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டு, மக்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான பொருட்களும், உணவு வகைகளும் சென்றடைய முடியாத நிலை.
போக்குவரத்து வசதியும், தொலைத் தொடர்பு வசதியும் கூட முற்றிலும் துண்டிக்கப்பட்டன. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள், நிவாரணப் பொருட்களும், உதவித் தொகையும் அளிக்கப்பட்டன.
1,800க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்த நிலையில், அவர்களுக்கு தனித்தனியாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்காலிக குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டன.
பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவதால் மத்திய, மாநில பொருளா தார வளர்ச்சிக்கு பெருமளவில் நீலகிரி பங்காற்றி வருகிறது. எனவே, இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழக அரசுக்கு முழு அளவிலான உதவிகளை செய்யவேண்டும்.
என்னுடைய வேலூர் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட ஆம்பூரிலும் சில மாதங்களுக்கு முன் தொடர் மழையால் திடீர் வௌளம் ஏற்பட்டு ஆற்றோரப் பகுதிகளில் உள்ள குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்தனர்.
இத்தகைய இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட தாமாக முன்வந்து உதவிகள் செய்ய மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் முழுமையான சீரமைப்புப் பணிகள் நிறைவேற மத்திய அரசு தாராளமாக உதவிகள் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications