தர்மபுரியில் ரூ 150 கோடியில் ஹட்சன் ஆலை!
பால் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹட்சன், பாலகோட்டில் இந்த ஆலையைத் திறந்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரமோகன் கூறுகையில், "எங்கள் நிறுவனத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 9 ஆலைகள் உள்ளன. இதில் பால், ஐஸ்கிரீம், நெய், பால் பவுடர் ஆகிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டம் பாலகோட்டில் ரூ.150 கோடி முதலீட்டில் புதிய ஆலையைத் திறந்துள்ளோம். இந்த தொழிற்சாலை இம்மாத இறுதியில் உற்பத்தியை தொடங்கும். இது ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் திறன் கொண்டது.
இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆலைக்கு தேவையான பால், அருகில் உள்ள 6க்கும் மேற்பட்ட வட்டங்களிலிருந்து பெறப்படும்.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ஹட்சனின் மொத்த விற்பனை ரூ.1030 கோடி. அடுத்த நிதி ஆண்டின் இறுதிக்குள் இதை ரூ.1200 கோடியாக அதிகரிக்கவுள்ளோம்", என்றார்.