கோபன்ஹேகன்-நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
டெல்லி: கோபன்ஹேகன் புவிவெப்ப மாற்ற மாநாட்டில் இந்தியாவின் நலனைப் புறக்கணிக்கும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என்று மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ஆனால் அவரது விளக்கத்திற்கு அதிருப்தி தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
ராஜ்யசபாவில் இன்று பூஜ்ய நேரத்தின்போது புவிவெப்ப மாற்ற மாநாடு குறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது.
பாஜக தலைமையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அரசை கடுமையாக குறை கூறி பேசினர்.
பாஜக தலைவர் அருண் ஜேட்லி பேசுகையில், இந்தியா தன்னிச்சையாக 20 முதல் 25 சதவீத புகை மாசைக் குறைக்கும் என அறிவித்தது மோசமான முன்னுதாரணமாகும். எதிர்க்கட்சியினரை கலந்து ஆலோசிக்காமல் அரசு இவ்வாறு அறிவித்தது தவறு. இந்தியாவின் நலனை விட்டுக் கொடுத்து விட்டது மத்திய அரசு.
ஏற்கனவே இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நிலையிலிருந்து மத்திய அரசு மொத்தமாக மாறியுள்ளது. எந்தவிதமான சட்ட கட்டுப்பாட்டையும் இந்தியா ஏற்காது என்று முன்னர் மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த நிலையில் மாற்றம் தெரிகிறது என்றார் ஜேட்லி.
இதற்குப் பதிலளித்த ஜெய்ராம் ரமேஷ், எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. கோபன்ஹேகன் மாநாட்டில் இந்தியாவின் நலனை மத்திய அரசு விட்டுக் கொடுக்காது. எந்தவிதமான சட்ட கட்டுப்பாட்டுக்கும் இந்தியா உடன்படாது. இதில் மாற்றமே இல்லை என்றார்.
இருப்பினும் அவரது பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
பாஜக தவிர சமாஜ்வாடிக் கட்சி, இடதுசாரிகள், அதிமுக ஆகியவையும் வெளிநடப்பில் கலந்து கொண்டன.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், இது திட்டமிட்ட வெளிநடப்பு, வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நடந்து கொண்டுள்ளனர் எதிர்க்கட்சியினர் என்றார்.
புவிவெப்ப மாநாடு இன்று கோபன்ஹேகனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications