கேபிள் வயர்கள் குறுக்கீடு-ரயில்வே எரிச்சல்
சென்னை: கேபிள் டிவிகாரர்கள் ரயில்வே பாதையின் குறுக்காக கேபிள் வயர்களை அமைத்திருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம் இந்த கேபிள் வயர்களை அகற்ற நடவடிக்கையில் குதித்துள்ளது.
நம் ஊர் மின் கம்பங்கள் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வயர்களைத் தாங்குவது போல மேலும் இரண்டு முக்கியப் பணிகளைச் செய்கின்றன. ஒன்று நாய்கள் மூச்சா போக இடம் தருவது, இரண்டாவது கேபிள் டிவிகாரர்களின் வயர்களையும் கூடவே தாங்கிக் கொள்வது.
தமிழகத்தில் உள்ள மின் கம்பங்கள் அனைத்திலம் கேபிள் வயர்கள் கட்டப்பட்டிருப்பதை சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
இப்போது ரயில்வே பாதை வழியாகவும் குறுக்கும் மறுக்குமாக கேபிள் வயர்கள் அணிவகுத்து ரயில் போக்குவரத்து அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாக தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
கேபிள் வயர்கள் இந்த இடங்களில் என்றில்லாமல் எங்கெல்லாம் வயர்களை இழுக்க முடியுமோ அங்கெல்லாம் இழுத்து வைத்துள்ளனர் கேபிள் டிவிகாரர்கள். மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், கட்சிக் கொடிக் கம்பங்கள் என அனைத்திலும் கேபிள் வயர்கை பிணைத்திருப்பதைப் பார்க்கலாம்.
தெருக்கள் என்றில்லாமல் முக்கிய சாலைகளிலும் குறுக்கும் மறுக்குமாக கேபிள் வயர்கள் கட்டப்பட்டுள்ளன.
கேபிள் டிவி வயர்கள் பல்வேறு இடங்களில் அறுந்து தொங்குவதால், மின்கசிவு உள்ளிட்ட பல்வேறு அபாயங்களும் எழுகின்றன.
மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் மின் கேபிள்களுக்கு குறுக்கே கேபிள் டிவி வயர்கள் கடந்து செல்வதால் மின் சாதனங்கள் பழுதடைய நேரிடுகிறது. பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.
இதையடுத்து கேபிள் வயர்களை உடனடியாக அகற்றுமாறு தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரவை பொருட்படுத்தாத கேபிள் டிவி ஆபரேட்டர்களஅ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.