அனல் பறக்கிறது திருச்செந்தூர், வந்தவாசி தேர்தல் பிரசாரம்
திருச்செந்தூர்: இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக திருச்செந்தூர் மற்றும் வந்தவாசியில் பல்வேறு கட்சித் தலைவர்கள் முறறுகையிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 19ம் தேதி நடக்கிறது. திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க சார்பில் அம்மன் நாராயணன், தே.மு.தி.க சார்பில் கோமதி கணேசன் உட்பட 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வந்தவாசி தொகுதியில் தி.மு.க.வின் கமலகண்ணன், அ.தி.மு.க.வின் முனுசாமி, தே.மு.தி.க.வி்ன் ஜனார்த்தனன் உட்பட 14 பேர் போட்டியிடிகின்றனர். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை தி.மு.க.வை ஆதரிக்கின்றன.
அ.தி.மு.க.வுக்கு ம.தி.மு.க, கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவளிக்கின்றன. தே.மு.தி.க தனித்து நிற்கிறது. பா.ம.க, பா.ஜ.க யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை
தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் ஓட்டுவேட்டையில் மும்முரமாக இறங்கியுள்ளனர். தி.மு.க.வுக்கு ஆதரவாக மு.க.அழகிரி, மாநில அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் முகாமிட்டு திட்டமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
அம்மன் டி நாராயணனுக்கு ஆதரவாக இளைஞர் பாசறை செயலாளர் டாக்டர் வெங்கடேஷ், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் தலைமையில் முன்னணி நிர்வாகிகள் முகாமிட்டு தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்களுடன் தே.மு.தி.க வேட்பாளரும் சோர்வின்றி களத்தில் நிற்கிறார். இவருக்கு ஆதரவாக மாநில துணை செயலாளர் ஆஸ்டின் தலைமையில் கட்சியினர் ஓட்டு வேட்டை நடத்துகின்றனர்.
திருச்செந்தூரி்ல் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் ஆகியோர் ஒட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நாளை முதல் 2 நாட்கள் எம்.பி கனிமொழி, நாளை மறுநாள் நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு மத்திய அமைச்சர்கள் அழகிரி, ஜி.கே.வாசன் ஆகியோரும் வர உள்ளனர்.
அதேபோல் வந்தவாசியில், 15ம் தேதியன்று ஒரே நாளில் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் தவிர பிரேமலதா விஜயகாந்த், மார்க்கிஸ்ட் மாநில செயலாளர் வரதராஜன், அமைச்சர் அன்பழகன், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், தளவாய் சுந்தரம், பொன்னையன், மதுசூதனன், செம்மலை, சோமசுந்தரம், வளர்மதி ஆகியோரும் பரபரப்பாக இரு தொகுதிகளிலும் ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.
தலைவர்கள் முற்றுகையால் இரு தொகுதிகளும் படு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications