Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு-83 காங்., தெலுங்குதேசம், பிரஜா ராஜ்ஜியம் எம்.எல்.ஏக்கள் விலகல்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவின் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சிகளைச் சேர்ந்த 83 எம்.எல்.ஏக்கள், 3 எம்.எல்.சிக்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இவர்களில் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 42 பேர், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 32 பேர், பிரஜா ராஜ்ஜியம் கட்சியினர் 9 பேர் ஆவர்.

அதேபோல, விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. லகடபதி ராஜகோபால் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால் ஆந்திராவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கூறுகையில் காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சோனியா காந்தி தனது பிறந்த நாள் பரிசாக தெலுங்கானா மாநிலம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு, ஆந்திராவில் காங்கிரஸை அழிக்க முடிவு செய்து விட்டதாகவே கருதுகிறோம்.

அவரது முடிவு தனது காலில் தானே சுட்டுக் கொண்டது போல உள்ளது.

தெலுங்கானா தனி மாநிலம் குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட முடியும் என நான் கருதவில்லை. அப்படிப்பட்ட தீர்மானத்திற்கு துணை போவதை விட ராஜினாமா செய்வதே மேல் என்று கருதுகிறேன்.

நிச்சயம் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர பகுதியில் பெரும் கலவரம் வெடிக்கும். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் புரட்சி வெடிக்கும்.

இந்த விஷயத்தை சந்திரசேகர ராவ் தனக்கு சாதகமாகத்தான் பயன்படுத்திக் கொள்வார். காங்கிரஸுடந் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ராவ், தேர்தல் முடிவு வெளியாவற்கு முன்பே அத்வானியின் யாத்திரையில் கலந்து கொள்ளப் போனவர். இவரால் காங்கிரஸுக்கு எந்தப் பயனும் இல்லை என்றார் ஆவேசமாக.

ஜெகன்மோகன் 'உள் குத்து':

ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியி்ன் ஆதராவளர்கள் ஆவர். அவர்கள் இந்த விவகாரத்தை வைத்து முதல்வர் ரோசையாவை நீக்கிவிட்டு ஜெகன் மோகனை முதல்வராக்க முயல்வதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், தனது எம்.பி. பதவியை விட்டு விலகுவதாக கூறி இன்று லோக்சபா சபாநாயகர் மீரா குமாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் டெல்லியிலிருந்து அவர் ஹைதராபாத் கிளம்பிச் சென்று விட்டார். ஒருங்கிணைந்த ஆந்திராவை காக்க தான் தீவிரமாகப் போராடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து ராயலசீமா, கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மேலும் பல காங்கிரஸ் எம்.பிக்களும் விலகுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன. தெலுங்கானாவை அமைக்கக் கூடாது என்று கோரி இவர்கள் போராட்டத்தி்ல் குதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ராஜினாமா செய்த எம்.பிக்கள் இன்று கூடி போராட்டம் குறித்து திட்டமிடவுள்ளனராம்.

இதேபோல தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவின் பிற பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதனால் ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவை எதிர்த்து போராட்டம் வெடித்தது ...

இந்த நிலையில் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன. சந்திரசேகர ராவின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கானா அமையக் கூடாது, அப்படியே அமைநதாலும் ஹைதராபாத்தை அதனுடன் சேர்க்கக் கூடாது என்று வலியுறுத்தி, கடப்பா மாவட்டம் பொதட்டூரில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியை நடத்திய முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜுலு ரெட்டி கூறும்போது, ஆந்திர மக்களின் வரிப்பணத்தில் பிரமாண்டமான நகரமாக உருவெடுத்துள்ள ஹைதராபாத்தை நாங்கள் தெலுங்கானாவில் சேர்க்க விட மாட்டோம். ஹைதராபாத் எங்களுக்கே சொந்தம். அதை தெலுங்கானாகாரர்களுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என்றார்.

பேரணியில் வந்த மாணவர்கள் சிலர் ஆவேசமாக சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ராயலசீமா மாநிலம் அமையுங்கள்...

மாணவர்கள் சங்க தலைவர் கிருஷ்ணய்யா கூறும்போது, சித்தூர், நெல்லூர், கர்னூல், அனந்தபுரம், கடப்பா ஆகிய மாவட்டங்களை தனியாக பிரித்து ராயல்சீமா என்ற தனி மாநிலத்தை அமைக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார்.

குண்டூரில் மக்கள் கூடி, சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் தெலுங்கு மொழி பேசும் மக்களை பிளவு படுத்தும் சந்திரசேகரராவை இனி ஆந்திராவிற்குள் நுழைய விடமாட்டோம் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்திலும் தெலுங்கானா மாநிலத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அங்குள்ள ஏ.யு. கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தெலுங்கானாவில் ஹைதராபாத்தை சேர்த்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கோஷமிட்டனர்.

இதேபோல் ஸ்ரீகாகுளம், பிரகாசம் மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

விஜயவாடா நகரில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்கள், மாணவர்கள் ஆகியோர் ரோட்டில் திரண்டு சந்திரசேகரராவ் உருவ பொம்மையை எரித்தனர்.

தெலுங்கானா மாநிலம் அமைக்க உறுதி கூறப் போய் தற்போது புதிதாக வெடித்துள்ள எதிர்ப்புப் போராட்டத்தால் ஆந்திர மாநில அரசு திணறிப் போயுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+