கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாகர்கோவிலில் மீனவர்கள் போராட்டம்
நாகர்கோயில்: மீன்பிடி தொழில் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து நாகர்கோவிலில் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற குளிர் கால கூட்ட தொடரில் கடல் மீன்பிடி்ப்பு (ஓழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை) சட்டம் 2009 என்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
கடல் பகுதியில் 12 கடல் மைல் தாண்டி மீன்பிடிக்க கூடாது. உரிமை பெறாமல் மீன்பிடித்தால் மீனவர்களின் தொழிற்கருவிகள் உடனே பறிமுதல் செய்யப்படும். அனுமதிக்கப்பட்ட வகை மீன்களை மட்டுமே பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சஙகள் இந்த சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் உள்ள 43 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் நாகர்கோவில் கலெகடர் அலுவலகம் முன்பு திரண்ட மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு 23க்கும் மேற்பட்ட மீனவ அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஆர்ப்பாட்டம் மறியலாக மாறிட கலெக்டர் அலுவலகம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிக்குழு அமைப்பாளர் சூசை ஆண்டனி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்தில், மீன்பிடி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் ஜி. ஜெலஸ்டின், விளவங்கோடு எம்.எல்.ஏ ஜான்ஜோசப், திருவட்டாறு எம்.எல்.ஏ லீமாரோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒரு வார கால ஸ்டிரைக்...
இதற்கிடையே, மீன்பிடித்தொழில் ஒழுங்கு முறை மசோதாவை ரத்து செய்யக் கோரி நாகப்பட்டினம் மற்றும் காரைக் கால் மாவட்ட மீனவர் டிசம்பர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை வேலை நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானித்து உள்ளனர்.
நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவ கூட்டமைப்பு கிராமபிரதிகள் கூட்டம் நாகை, கீச்சாங்குப்பம் மீன் இறங்குதளத்தில் நடைபெற்றது. இதில் கடல் மீன்பிடித் தொழில் வரைவு சட்டம் 2009ம் (கடற்கரை ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை) தொடர்பாக மத்திய அரசு புதிய மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யக்கூடாது.
இந்த சட்ட மசோதாவை உடனே ரத்து செய்ய வேண்டும். இந்த மசோதா நிறை வேற்றப்பட்டால் மீனவர் சமுதாயம் மீனவர்களை மீனவ தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த மீனவ கிராம மக்கள் அனைவரும் வரும் 17ம் தேதி டெல்லியில் நடக்கும் மீனவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதில்லை. மீனவர்கள் தொழில் மறியல் செய்து ஒத்துழைக்க வேண்டும்.
தமிழக கடலோர மீனவ கிராம மீனவர்கள் டெல்லியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். வேலை நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ள 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை இப்பகுதி மீன் வியாபாரிகள் மீன் விற்பனை செய்யக் கூடாது.
மேலும் நாகை, காரைக்கால் பகுதி மீனவ கிராமங்களில் உள்ள விசைப்படகு, கட்டுமரம், மாருதி கட்டுமரம், பைபர் படகுகள் வைத்துள்ள உரிமையாளர்கள் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
நாகை மாவட்டத்தின் கடலோரங்களில் அரசோ, தனியார் நிறுவனமோ மீன் உற்பத்தி அமைக்க முற்பட்டால் மீன சமுதாயம் ஒற்று கூடி திட்டத்தை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாகப்பட்டினம், அக்கரைபேட்டை, நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், நாகூர்,செருதூர், விழுந்தமாவுடி, ஆற்காட்டுதறை மற்றும் காரைக்கால், கிளிஞ்சல்மேடு, கோட்டிச்சேரி உள்பட 51 மீனவர்கள் கிராம பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications