தலைமறைவான கொங்கு இளைஞர் பேரவை தலைவர் - போலீசார் திணறல்
திண்டுக்கல்: நிலக்கோட்டையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தேடப்பட்டு வரும் கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசுவை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின் போது, தி.மு.க.வைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கோட்டைசாமி ஆதரவாளர்களுக்கும், கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும், கடுமையாக மோதிக் கொண்டதில் பலருக்கு மண்டை உடைந்தது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் உச்சகட்டமாக மதுரை அருகே அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் ஒருவர் கல்வீசி தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் உ.தனியரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் வழக்குப்பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.