கட்டடத்தில் மோதிய ஹெலிகாப்டர் பிளேட்: பிரதீபா பாட்டீல் உயிர் தப்பினார்
இந்திய விமானப் படைக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் ஒரிசா ஆளுனர் எம்.சி.பண்டாரியும் இருந்தார்.
நேற்று மாலை பூரி நகரில் இருந்து புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கிய போது இந்த விபத்து நிகழ்ந்தது.
புவனேஸ்வரி்ல் உள்ள பிஜுபட்நாயக் விமான நிலையத்தில் தரையிறங்கிய சமயத்தில், ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் ஹெலிகாப்டரின் மேற்புற விசிறி உரசியது. விசிறிகள் உரசிய வேகத்தில் கட்டிடத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் தூக்கி வீசப்பட்டன. இதில் ஹெலிகாப்டரின் விசிறிகள் வளைந்தன.
பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு, உடனடியாக ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த பிரதீபா பாட்டீல் உள்ளிட்டோர் தப்பித்தனர்.
சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்பு ஒரு முறை பிரதீபா பாட்டீல் பயணம் செய்த விமானப்படை விமானம் தரையிறங்கும்போது, இன்னொரு விமானம் டேக் ஆப் ஆக அனுமதி கொடுக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு விபத்தை குடியரசுத் தலைவர் சந்தித்துள்ளதால் பாதுகாப்பு கோளாறு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.