800 டன் வெடிபொருளுடன் பாகிஸ்தானியர்கள் வந்த கப்பல் பறிமுதல்
ஹால்தியா: 800 டன் அம்மோனியம் நைட்ரேட்டுடன் சென்ற எஸ்தோனிய நாட்டுக் கப்பலை கடலோரக் காவல் படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படுவது இந்த அம்மோனியம் நைட்ரேட். இவ்வளவு அதிகமான வெடிபொருளுடன் இந்த எஸ்தோனியக் கப்பல் மேற்கு வங்க மாநிலம் ஹால்தியா துறைமுகத்திற்கு வந்தது.
இதையடுத்து இக்கப்பல் மேற்கொண்டு செல்லாமல் கடலோரக் காவல் படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த கப்பலில் 24 ஊழியர்கள் உள்ளனர். அனைவருமே பாகிஸ்தானியர்கள் என்பதால் கப்பல் மீதும், அதில் உள்ள வெடிபொருள் மீதும் பலத் சந்தேகம் எழுந்துள்ளது.
எதற்காக இவ்வளவு அதிக வெடிபொருட்களுடன் இக்கப்பல் மேற்கு வங்கத்திற்கு வந்தது என்பது குறித்து மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கப்பலிலிருந்து அனைத்து பொருட்களும் இறக்கி வைக்கப்பட்ட பின்னர்தான் அது அம்மோனியம் நைட்ரேட் என்பதை துறைமுக அதிகாரிகள் கண்டுபிடித்தனராம்.
இந்தக் கப்பல் நவம்பர் 1ம் தேதி முதலே துறைமுகத்திற்கு ஒன்றரை கிலோமீட்டருக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கப்பலுக்கு உரங்களை இறக்குமதி செய்யும் உரிமம் மட்டுமே உள்ளது. ஆனால் அது வெடிபொருளுடன் வந்துள்ளதால் சந்தேகம் வலுத்துள்ளது.