அழகுபடுத்தப்பட்ட மெரினா - 20ம் தேதி கருணாநிதி திறக்கிறார்
சென்னை: அழகுபடுத்தப்பட்ட மெரினா கடற்கரையை 20ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்க உள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தர ஆணைகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
விழாவில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், '4 மருத்துவர்கள், 7 மருந்தாளுநர்கள், 107 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனங்கள், தொழிற்பயிற்சி நிலைய (ஐ.டி.ஐ.) முதல்வர் உட்பட 7 பேருக்கு பணி நிரந்தர ஆணைகள் மற்றும் 15 மலேரியா களப்பணியாளர்களுக்கு ஆணைகள் என 140 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்படுகிறது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உரிமைகளை இழந்து, இழந்த உரிமைக்காக போராடியபோது அரசுத்துறைகள் மற்றும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித்துறைகளின் ஊழியர்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.
ஆனால், முதல்வர் கருணாநிதி அரசுப்பணியில் நேரடி நியமனத்திற்கு இருந்த தடை ஆணையை நீக்கினார். அது மட்டுமல்லாமல் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டது. இதனால், நேரடி நியமனம் மற்றும் கருணை அடிப்படையில் தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளிலும் நியமனங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகம் முழுவதும் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 260 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இனி வருங்காலங்களில் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்திட வேண்டும். இதை கூறுவது பணி அளிக்கக்கூடாது என்பதற்காக அல்ல, உங்களை நோயிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
1996ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயராக நான் பொறுப்பேற்ற பொழுது ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற வேண்டும் என்பதாகும். அந்த பணியில் 85 சதவீதம் தொட்டுள்ளோம். 100 சதவீதத்தையும் முழுமையாக முடிப்போம்.
அடையாறு பூங்காப் பணிகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு, நடைபெற்று வருகிறது. முதல்வர் கருணாநிதி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைப்பார்.
அதேபோன்று சென்னை மாநகரில் உள்ள கூவத்தை சீரமைப்பதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு தலைவராக நான் பொறுப்பு வகிக்கிறேன். அந்த பணியும் நிறைவேற்றி சென்னை மாநகராட்சி மக்களுக்கு பரிசாக அளிக்க உள்ளோம்.
மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன. நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை 3.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டுள்ளது.
உழைப்பாளர் சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரையில் 14 அமர்வு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக 4 மீட்டர் அகலமுள்ள நடை பாதைகள் பலவித வண்ணங்களில் சிமென்ட் கற்களால் கண்ணை கவரும் வகையில் பதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காமராஜர் சாலை கிழக்கில் பாதசாரிகளுக்காக 5 மீட்டர் அகலமுள்ள அழகிய கிரானைட் கருங்கல் பதிக்கப்பட்ட நடைப்பாதையும், ஓரங்களில் அழகிய கருங்கல் தூண்களில் இணைக்கப்பட்ட ஸ்டெயின்லஸ் ஸ்டிலிலான கைப்பிடி தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய புல் தரைகள், 2 நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக கூடுதலாக பேருந்துகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான போதுமான நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி சிலை அருகில் அழகிய நீரூற்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புமிக்க பணிகளால் மெரினா கடற்கரை உலகின் முதன்மையான அழகிய கடற்கரையாக விளங்கும். 25 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் மெரினா கடற்கரை அழகுப்படுத்தும் பணி முடிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட மெரினா கடற்கரையை 20ம் தேதி முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார் என்று ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications