திருச்செந்தூர் - அதிமுக தேர்தல் அலுவலகத்துக்குத் தீ வைப்பு
திருச்செந்தூர்: இடைத் தேர்தலையொட்டி திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் போடப்பட்டிருந்த தேர்தல் அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குரும்பூரை அடுத்துள்ள சேதுக்குவாய்த்தான் கிராமத்தில் ஒரு கட்டடத்தின் முன்புறம் கூரை செட் போட்டு அதிமுக தேர்தல் அலுவலகம் அமைத்திருந்தனர்.
இந்த அலுவலகத்திற்கு அடுத்த இடத்தில், தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் என்பவரின் டீக்கடை உள்ளது.
நேற்று நள்ளிரவில் தி.மு.க. கிளை செயலாளர் கடையில் பற்றிய தீ மளமளவென பரவி அ.தி.மு.க.,தேர்தல் அலுவலகத்திற்குத் தொற்றியது. இதில், கூரை செட் தீக்கிரையானது.
அப்போது உள்ளே அதிமுக தொண்டர் இசக்கிமுத்து உள்ளிட்ட சிலர் படுத்திருந்தனர். தீ பரவியதும் அவர்கள் வேகமாக வெளியேறி விட்டனர். யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து குரும்பூர் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர்தான் வேண்டும் என்றே தீயை பரவவிட்டுள்ளனர் என்று அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.