தெலுங்கானா போராட்டம்-சென்னைக்குக் குடிநீர் நிறுத்தம்
நெல்லூர்: சென்னைக்கு கிருஷ்ணா நீரைத் தரக் கூடாது என்று கூறி தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு அனுப்பப்பட்டு வரும் கண்டலேறு குடிநீரை அனுப்ப விடாமல் தடுத்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர் ஆந்திர மாநில போராட்டக்காரர்கள்.
தெலுங்கானா மாநிலத்தை எதிர்த்து ஆந்திராவின் இதர பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல், தமிழகத்தை எதிர்த்து போராட்டத்தில் சிலர் திரும்பியுள்ளனர்.
சனிக்கிழமை தெலுங்கானா மாநிலத்தை எதிர்த்து பந்த் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெல்லூர் மாவட்டம் ராபூர் மண்டல் பகுதியில், உள்ள கண்டலேறு அணையின் மதகுகளை மூடி விட்டனர்.
இங்கிருந்துதான் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் கீழ் சென்னைக்கு குடிநீர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக் கூடாது என்றும் அவர்கள் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளை மிரட்டினர்.
இருப்பினும் சனிக்கிழமை மாலை மீண்டும் மதகுகளைத் திறந்த அதிகாரிகள் தண்ணீர் விநியோகத்தைத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வந்த போராட்டக்காரர்கள், மீண்டும் மதகுகளை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த ஊழியர்களுடனும் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு கிருஷ்ணா ஆற்றிலிருந்து ஆண்டுக்கு 15 டிஎம்சி நீரை பகுதி பகுதியாக தர வேண்டும். இந்த தண்ணீர் சென்னை நகருக்காக பெறப்படுகிறது. இந்த ஆண்டு இதுவரை 4.5 டிஎம்சி நீர் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தெலுங்கு தேசம் மாவட்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சந்திரமோகன் ரெட்டி கூறுகையில், தெலுங்கானா குறித்த மத்திய அரசின் முடிவுக்கு சில சக்திகளின் சதியே காரணம் என சந்தேகிக்கிறோம்.
ஆந்திராவைப் பிரித்து அதன் வளர்ச்சியை அழிக்க நடந்த சதியே இது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சில தலைவர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
ஒருங்கிணைந்த ஆந்திரா தொடர வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் என்றார் ரெட்டி.