தனி விதர்பா மாநிலம் கோரி போராட்டம்-ரயில் சிறைபிடிப்பு
மும்பை: மகாராஷ்டிரத்தைப் பிரித்து தனி விதர்பா மாநிலம் அமைக்கக் கோரி போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விதர்பா பகுதியில் வன்முறைகளும் நடந்து வருகி்ன்றன.
நாக்பூர், அமராவதி பகுதிகளை உள்ளடக்கி தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இது மகாராஷ்டிரத்தின் மொத்த பரப்பளவில் 31 சதவீத பகுதியாகும். அம் மாநில மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
1950களில் இந்தியாவின் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாக இப் பகுதி விளங்கியது. பெரும்பாலும் இந்தி பேசும் மக்களைக் கொண்ட இந்தப் பகுதி அப்போதைய பிரதமர் நேருவால் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட்டது.
இந் நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தனி விதர்பா மாநில விவகாரம் தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுவதையடுத்து மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி விதர்பா பகுதியில் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன.
நாக்பூர் அருகே இன்று காலை மும்பை-விதர்பா எக்ஸ்பிரஸ் ரயில் வழி மறிக்கப்பட்டது. தண்டவாளத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அமர்ந்து ரயிலை சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தனி விதர்பா மாநிலம் கோரி கோஷங்கள் எழுப்பி வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
மிகவும் பி்ற்பட்ட பகுதியாக விளங்கும் இங்கு சில ஆண்டுகளுக்கு முன் நிலவிய கடும் வறட்சியால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது நினைவுகூறத்தக்கது.