கூர்க்காலாந்தை அடைய வன்முறையில் குதிப்போம்-கூர்க்கா மோர்ச்சா மிரட்டல்
சிலிகுரி: தனி கூர்க்காலாந்து மாநிலத்தை அடைய கடைசிப் போராட்டமாக வன்முறையை கையில் எடுக்க நேரிடும் என கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பு மிரட்டியுள்ளது.
தெலுங்கானாவைத் தொடர்ந்து தற்போது ஆளாளுக்கு தனி மாநிலம் கேட்டு கிளம்பி விட்டனர். ஏற்கனவே கேட்டு பெரும் போராட்டங்கள் நடத்தி ஓய்ந்த பல அமைப்புகளும் மீண்டும் தீவிரப் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றன.
அப்படிப்பட்ட அமைப்புகளில் ஒன்று கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா. இந்த அமைப்பு தனி கூர்க்காலாந்து மாநிலம் கோரி வருகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி பாணியில் வன்முறையின் மூலம் தனி மாநிலத்தை அடைய தயங்க மாட்டோம் என அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து அமைப்பின் தலைவரான பிமல் குருங் கூறுகையில், டார்ஜிலிங்கில் நாங்கள் தொடங்கவுள்ள போராட்டம் இறுதிப் போராட்டமாக அமையும். இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால் நிச்சயம் வன்முறை வெடிக்கும்.
இதுதான் எங்களது இறுதிப் போராட்டம். இதை அமைதியான முறையில், ஜனநாயக முறையில் நடத்தப் போகிறோம்.
எல்லா இடத்திலும் புது மாநிலங்கள் அமைக்கப்படாது என்று பிரணாப் முகர்ஜி கூறியிருப்பது ஏற்க முடியாது. அவருக்கு தெரிந்த அரசியல் அவ்வளவுதான்.
வன்முறை கலக்காமல் எங்களது இறுதிப் போராட்டத்தை நாங்கள் நடத்த விரும்புகிறோம். இதை பிரணாப் முகர்ஜி புரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், எங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.
எங்களை மிரட்டவோ, பணிய வைக்கவோ அரசு முயற்சித்தால் நாங்கள் வன்முறையைக் கையில் எடுப்போம். அந்த நிலைக்கு எங்களைத் தள்ள வேண்டாம் என பிரணாபை கேட்டுக் கொள்கிறேன்.
கூர்க்காலாந்து அமைய அனுமதிக்க முடியாது என்று சொல்ல மமதா பானர்ஜி, முதல்வர் புத்ததேவ், காங்கிரஸ் தலைவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல எங்களது கோரிக்கையை வலியுறுத்த எங்களுக்கும் உரிமை உண்டு என்றார் பிமல்.
டிசம்பர் 21ம் தேதி கூர்க்காலாந்து விவகாரம் குறித்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை டார்ஜிலிங்கில் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக பிமல் கூறியுள்ளார்.
மேலும், இன்று முதல் 96 மணி நேர கடையடைப்புக்கும் கூர்க்கா ஜன முக்தி மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
வடக்கு மேற்கு வங்க பகுதிகளைப் பிரித்து டார்ஜிலிங்கைத் தலைநகராகக் கொண்டு தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கூர்க்கா ஜன முக்தி மோர்ச்சா கோரி வருகிறது. மேலும், டார்ஜிலிங் கூர்க்கா மலைக் கவுன்சிலுக்கு தனி அந்தஸ்து தரப்பட்டுள்ளதற்கும் அது எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கடந்த 2005ம் ஆண்டு கூர்க்கா தேசிய விடுதலை முன்னணி தலைமையில் இயங்கும் டார்ஜிலிங் கூர்க்கா மலைக் கவுன்சிலுக்கு மத்திய அரசு தன்னாட்சி அங்கீகாரம் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications