கட்டண வசூல் சாவடிகளை ஏலம் விடும் நெடுஞ்சாலைத் துறை
டெல்லி: நெடுஞ்சாலைத் துறையில் மேலும் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், அனைத்து கட்டண வசூல் சாவடிகளையும் (டோல் பிளாஸா) தனியாருக்கு ஏலத்தில் விட மத்திய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.
இப்போது இந்த கட்டண வசூல் சாவடிகளை முன்னாள் ராணுவத்தினர் நிர்வகித்து வருகின்றனர். பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துறையின்பேரில் இவ்வாறு செய்யப்பட்டு வந்தது.
இனி வருவாயை அதிகப்படுத்தும் வகையில், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட தொகைக்கு கட்டண வசூல் சாவடிகளை ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் உள்ள (என்.எச்.-2) ஏழு கட்டண வசூல் சாவடிகளும், என்.எச்.-25ல் ஒரு கட்டண வசூல் சாவடியும் முதல்கட்டமாக இவ்வாறு ஏலம் விடப்படுகிறது.
விரைவில் மேலும் 24 கட்டண வசூல் சாவடிகள் ஏலம் விடுப்படும்.
மொத்தம் 96 கட்டண வசூல் சாவடிகள், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளதாகவும், இவற்றின் மூலம் தற்போது ரூ.1,700 கோடி வருவாய் கிடைப்பதாகவும் நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
இவற்றை ஏலத்தில் விட்டால் மேலும் பல மடங்கு அதிகமான வருவாய் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளதால், இந்த புதிய முடிவு எடுத்துள்ளார்களாம்.