புயல் மேலும் வலுவிழந்தது: திரிகோணமலையை நெருங்கியது- நாளை தமிழகத்தில் கரை கடக்கும்

வார்ட் புயல் நிலவரம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கைச் செய்தி...
தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து வந்த வார்டு புயல் இன்று பிற்பகல் இலங்கையின் திரிகோணமலை நெருங்கி விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் அது கரையைக் கடக்கும்.
பின்னர் அது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து, மன்னார் வளைகுடாவுக்குள் பிரவேசிக்கும். பின்னர் நாளை பிற்பகல் வாக்கில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே அது கரையைக் கடக்கும்.
இருப்பினும் தற்போது புயல் மேலும் வலுவிழந்துள்ளது. இது மேலும் வலுவிழக்க வாய்ப்புகள் உள்ளன.
புயல் காரணமாக, தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகள், புதுச்சேரியில், அடுத்த 36 மணி நேரத்தில் பல இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கன மழை பெய்யும். சில இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புண்டு.
அடுத்த 24 மணி நேரத்தில் தெற்குக் கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 75 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் புயல் காற்று வீசும்.
அதேபோல வடக்கு கடலோர மாவட்டங்களில் கடலில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும்.
கடல் கொந்தளிப்பாக காணப்படும். அலைகள் பெரிதாக எழும். எனவே மீனவர்கள் கடலுக்குள் போக வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications