மும்பை தாக்குதல்: 'குட்ஜாப்' என்று பாராட்டிய ராணா-புதிய ஆடியோ ஆதாரம்!
சிகாகோ: மும்பையில் கடந்த ஆண்டு நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், அதில் ஈடுபட்ட லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை ஹெட்லியும், ராணாவும் பாராட்டிப் பேசியது தொடர்பா முக்கிய ஆதாரத்தை எப்.பி.ஐ தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து சிகாகோ கோர்ட்டில் எப்.பி.ஐ. வழக்கறிஞர்கள் பத்து பக்க அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
ஹெட்லியும், ராணாவும் ஒரு காரில் நீண்ட தொலைவு பிரயாணத்தில் இருந்தபோது இவ்வாறு பேசியுள்ளனர். இதன் ரகசியப் பதிவைத்தான் தற்போது எப்.பி.ஐ. சிகோகா கோர்ட்டில் கொடுத்துள்ளது.
தனது பேச்சின்போது, ராணா, ஹெட்லியிடம் கூறுகையில், இந்த உலகில் மிகப் பெரிய விருது ஏதாவது இருந்தால் அதை இவர்களுக்கு (லஷ்கர் தீவிரவாதிகள்) தர வேண்டும். மிக அருமையான வேலையை செய்துள்ளனர். குட்ஜாப் என்று கூறியுள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பான செய்தியை காலித் பின் வாலித் என்பவர் ஹெட்லி மூலமாக ராணாவுக்குத் தெரிவித்துள்ளார். இந்த காலித் பின் வாலித் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஆவார்.
இவரது செயலையும், இவருடன் இணைந்து மும்பைத் தாக்குதல் திட்டத்தைத் தீட்டியவர்களையும் ராணா வெகுவாக புகழ்ந்துள்ளார்.
பேச்சின்போது, தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்த அபு குஹாபா என்பவரை ஹெட்லி வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இவற்றைக் குறிப்பிட்டுள்ள எப்.பி.ஐ வழக்கறிஞர்கள், 170 பேர் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தைப் பாராட்டி, புகழ்ந்து பேசியுள்ளார் ராணா. இதிலிருந்தே இவர் எந்தளவுக்கு மோசமானவர் என்பது தெரிய வருகிறது. நிச்சயம் இவர் காந்தியாக இருக்க முடியாது என்று வாதிட்டனர்.
ஏற்கனவே மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவராக ஹெட்லி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எப்.பி.ஐ. குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் ராணாவுக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ராணாவுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அப்துல் ரஹ்மான் ஹஷீம் சயத்துக்கும் தொடர்பு இருப்பதாகவும், மும்பைத் தாக்குதலுக்கு முன்பு துபாயில் இருந்த சயத்துடன் ராணா பேசியதாகவும் எப்.பி.ஐ. வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
சயத்தை பாஷா என குறிப்பிட்டுள்ளார் ராணா. இந்த சயத் மீதும் எப்.பி.ஐ ஏற்கனவே குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.
ராணா, ஹெட்லி குறித்து எப்.பி.ஐக்கு பல மாதங்களுக்கு முன்பே சந்தேகம் வந்து விட்டது. இதையடுத்து அவர்களை படு தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதன் ஒரு பகுதியாகவே அவர்களது கார் பேச்சை ரகசியமாக பதிவு செய்து வைத்து தற்போது மிகப் பெரிய ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.
இந்த பேச்சின்போது மும்பைத் தாக்குதல் எப்படி திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது என்பதை தன்னிடம் சயத் கூறியதாக ராணாவிடம், ஹெட்லி தெரிவித்தார்.
ஹெட்லிதான் ஒருங்கிணைத்தார்...
இந்த நிலையில் மும்பை வழக்கின் மிக முக்கித் திருப்பமாக, மும்பைத் தாக்குதல் சம்பவங்களை ஹெட்லிதான் ஒருங்கிணைத்து நடத்தியதாக புதிய, மிக முக்கியமான குற்றச்சாட்டையும் எப்.பி.ஐ வைத்துள்ளது.
ராணா தனது பேச்சின்போது குறிப்பிட்ட காலித் என்பவரின் இன்னொரு பெயராக சாஜித் மீர் என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பெயரில்தான் அவர் நடமாடி வந்துள்ளார். இவர் லஷ்கர் அமைப்பின் சர்வதேச பிரிவின் தலைவராக கருதப்படுகிறது. பாகிஸ்தானுக்கு வெளியில் நடைபெறும் தாக்குதல்களை இவர்தான் திட்டமிடுவார் எனத் தெரிகிறது.
இவர் முன்பு பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
ஹெட்லி, ராணா படித்த ராணுவப் பள்ளியில்தான் இந்த மீர் என்கிற காலித்தும் படித்ததாக பாகிஸ்தான் அரசு சந்தேகப்படுகிறது.
3 கோர்ட்களில் மும்பை வழக்கு...
மும்பை தாக்குதல் சம்பவம் உலகின் மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது. மும்பையில் தனி கோர்ட்டில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வருகிறது. நம் வசம் கசாப் மட்டும் சிக்கியுள்ளார்.
இந்த நிலையில் மும்பை சம்பவத்தின் முக்கிய மூளைகளாக செயல்பட்டிருப்பதாக சந்தேகப்படும் ஹெட்லியும், ராணாவும் அமெரிக்காவின் பிடியில் சிக்கி அங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேபோல மும்பைத் தாக்குதலை திட்டமிட்ட லஷ்கர் இ தொய்பா தலைவர் லக்வி உள்ளிட்டோர் பாகிஸ்தான் வசம் உள்ளனர். இருப்பினும் பாகிஸ்தான் இந்த வழக்கு தொடர்பாக ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. ஆனால் தற்போது அமெரிக்காவில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்களால் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி அதிகரிக்கும் எனத் தெரிகிறது.