மதுரை மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர் உரிமையாளரை கடத்திய ஆந்திர போலீஸ்
மதுரை: மதுரையின் பிரபலமான மாப்பிள்ளை விநாயகர் - மாணிக்க விநாயகர் தியேட்டர் உரிமையாளர் வெற்றிவேல் கண்ணனை ஆந்திர போலீஸார் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை காளவாசல் சந்திப்பு அருகே மாப்பிள்ளை விநாயகர், மாணிக்க விநாயகர் தியேட்டர்கள் உள்ளன. இதன் உரிமையாளர்கள் கதிர்வேல், பால முருகானந்தம், வெற்றிவேல் கண்ணன் (37).
மாணிக்க விநாயகர் தியேட்டரில் நேற்று இரவு 8.45 மணிக்கு முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அலுவலகத்தில் வெற்றிவேல் கண்ணன், மேலாளர் துரைராஜ் இருந்தனர்.
அப்போது ஒரு மர்மக்கும்பல் உள்ளே புகுந்தது. அதில் ஒருவர் வெற்றிவேல் கண்ணனை அடையாளம் காட்டினார். அவரை தமிழ் அல்லாத வேறு மொழிகளில் பேசியவாறு மர்மக்கும்பலை சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். தடுக்க முயன்ற தியேட்டர் ஊழியர்களிடம் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர், அசையாதே என்று ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
அனைவரும் போலீஸார் போல காட்சியளித்தனர். பின்னர் துப்பாக்கி முனையில் வெற்றிவேல் கண்ணனை, தியேட்டருக்கு வெளியில் இருந்த காருக்குள் ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் ரோட்டில் மாயமாகினர்.
இதையடுத்து போலீஸ் துணைக் கமிஷனர் தேன்மொழி தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். சோதனைச் சாவடிகளில்போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் வெற்றிவேல் கண்ணனை கடத்தியது ஆந்திர போலீஸ் என கண்டுபிடித்தனர். ஓங்கோல் எஸ்.பி., யின் உத்தரவின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
செக் மோசடி வழக்கு ஒன்றில் ஆந்திர கோர்ட் பலமுறை சம்மன் அனுப்பியும் வெற்றிவேல் கண்ணன் ஆஜராகாததால் அவரை ஆந்திர போலீசார் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து ஆந்திர போலீசார் மீது கரிமேடு காவல் நிலையத்தில் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications