அமைச்சர்களுடன் வருபவர்களுக்கும் இனி ஓசி விமான பயணம்
டெல்லி: அமைச்சர்களுடன் பயணம் செய்யும் அவர்களின் குடும்பத்தினர் தவிர, நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரும் விமானத்தில் ஓசியாக இனி பயணம் செய்ய வகை செய்யும் சட்ட மசோதா நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் இதரப்படிகள் என்று லட்சக்கணக்கில் அள்ளிக் கொட்டுகிறார்கள். இதுபோதாதென்று விமானங்களில் இலவச பயணம் மேற்கொள்ளவும் மத்திய அமைச்சர்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை அமைச்சர்கள் மட்டுமல்லாமல், அவர்களது மனைவியர், பிள்ளைகள், மற்றும் உதவியாளரும் அனுபவித்து வருகிறார்கள். இதற்கிடையே அமைச்சரின் உறவினர்களும் விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதை மத்திய அரசு உடனே ஏற்றுக் கொண்டது. உறவினர்கள் மற்றும் அமைச்சர்களின் நண்பர்களும் இனி விமானத்தில் 'ஓசி' பயணம் செய்யலாம் என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதுதொடர்பான மத்திய அமைச்சர்களின் சம்பளம் மற்றும் இதரப் படிகள் திருத்த சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அப்போது அரசு நடந்து கொள்ளும் முறை குறித்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக குறை கூறி அமளியில் குதித்தன.
இருப்பினும் இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் விட்டார். இதைத் தொடர்ந்து விவாதமே இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 48 தடவை விமான பயணம் செய்வதற்கான கட்டணத்தை அந்தந்த துறைகள் கொடுக்கின்றன. இந்த சலுகை தற்போது அமைச்சர்களின் உறவினர்கள், நண்பர்களுக்கும் அனுபவிக்கப் போகின்றனர்.