நடேசன், புலித்தேவன் படுகொலை - சர்வதேச விசாரணை கோரும் எல்டிடிஇ
கொழும்பு: ராணுவத்தினர்தான் சரணடைய வந்த பா.நடேசன், புலித்தேவன் மற்றும்ர ரமேஷ் ஆகிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை சுட்டுக் கொன்றது என்று பொன்சேகா கூறியுள்ளதன் அடிப்படையில் இதுகுறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இணைப்பாளர் ருத்திரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா சமீபத்தில் அளித்த பேட்டியில் விடுதலைப்புலிகள் சமாதான தூதுவர்களான நடேசன், புலித்தேவன் ஆகியோர் கொல்லப்பட்டது பற்றி கூறியிருந்தார்.
இதுபற்றியும், ஜனவரி முதல் மேமாதம் வரை நடந்த இறுதி யுத்தத்தின்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றம் விசாரணை நடத்த வேண்டும்.
ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன், இந்தபோர் குற்றங்கள் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தில் பங்குதாரர்களாக உள்ள நாடுகளும் இந்த விஷயத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வெள்ளை கொடியோடு வருமாறு கூறி விட்டு பின்னர் அவர்களை பாதுகாப்பு துறை செயலாளர் கோதபயா ராஜபக்சே சுட்டுக்கொல்ல உத்தரவிட்டு இருக்கிறார். இதில் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை நடத்துவதை ஏற்க முடியாது. இதனால் எந்த பயனும் இருக்காது.
சர்வதேச சமூகம் இந்த விஷயத்தில் இதுவரை செயல்படாமல் இருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.