'சுனாமி' நினைவு தினம்: ஓயாத சோக அலைகள்!
நாகப்பட்டனம்: சுனாமி ஆழிப் பேரலை தாக்கியதன் 5வது நினைவு தினம் இன்று சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டன.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஆசிய நாடுகளை சுனாமி ஆழிப் பேரலைகள் தாக்கின. இந்தோனேசியா முதல் இந்தியா வரை இந்தியப் பெருங்கடலைப் புரட்டிப் போட்ட சுனாமி அலைகளுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் மட்டும் 8000க்கும் மேற்பட்டோர் சுனாமி அலைகளுக்குப் பலியானார்கள். குடும்பம் குடும்பமாக உயிர்களைப் பறித்துச் சென்றன சுனாமி அலைகள்.
வரலாறு காணாத இந்த சோக நிகழ்வின் 5வது ஆண்டு தினம் இன்று. இதையொட்டி சுனாமியால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நாகப்பட்டனம், கடலூர், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் இன்று கண்ணீராஞ்சலி செலுத்தப்பட்டது.
நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம், வேளாங்கன்ண்ணி, கீச்சாங்குளம், அக்கரைபேட்டை, கோடியக்கரை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் சுனாமிக்குப் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
கடற்கரைகளில் மக்கள் ஆயிரக்கணக்கானோர் குழுமி உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்திகளை ஏற்றியும், படையல் இட்டும் அஞ்சலி செலுத்தினர்.
சுனாமிக்கு தங்களது பெற்றோர்கள், குடும்பங்களைப் பறிகொடுத்த குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினற்.
சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர பகுதி மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.
கனிமொழி தலைமையில் ஊர்வலம்
நாகப்பட்டினத்தில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட மெளன ஊர்வலம் நடந்தது.
நாகை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கி, துறைமுகம் முகத்துவாரம் வரை நடைபெற்றது. அங்கு கனிமொழி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இன்னும் ஓயாத சோக அலைகள்
சுனாமி பேரலைகள் ஏற்படுத்தி விட்டுச் சென்ற சோக அலைகள், மக்கள் மனதிலிருந்து இன்னும் ஓயவில்லை.
நாகை மாவட்டம்தான் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகும். இங்கு மட்டும் கிட்டத்தட்ட 6000 பேர் உயிரிழந்தனர். 1 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
வீடுகளை இழந்தவர்களுக்கும், உறவுகளைப் பறி கொடுத்தவர்களுக்கும், அரசிடமிருந்தும், பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்களிடமிரு்நதும் ஏராளமான உதவிகள் ஓடி வந்தன.
வீடுகள், மீனவர்களுக்குப் புதிய படகுகள், பெற்றோர்கள், குடும்பத்தினரை இழந்த குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை மையங்கள், இலவச கல்வி உதவி என பல்வேறு உதவிகள் ஓடோடி வந்ததால் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் எழுந்து நிற்க முடிந்தது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்களில் 40 சதவீதம் (இவர்களில் பெரும்பாலானவர்கள் கணவர்களை இழந்தவர்கள்) இன்று கைத் தொழிலைக் கற்றுக் கொண்டு சுயமாக வாழ பழகிக் கொண்டுள்ளனர். செருப்புகள் தயாரிப்பது, தோல் பொருட்கள் தயாரிப்பு, ஊறுகாய், கயிறு உள்ளிட்டவற்றைத் தயாரிப்பது என பல்வேறு சிறு தொழில்களை கற்றுக் கொண்டு சொந்தக் கால்களில் நின்று வருகின்றனர்.
மேலும், மீன் பிடி தொழிலையும் பல பெண்கள் கற்றுக் கொண்டு மீனவப் பெண்களாகவும் மாறியுள்ளனர். இது போக தையல், நடமாடும் கேன்டீன்களை நடத்துவது, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, டிரைவிங், கட்டுமானத் தொழிலில் ஈடுபடுவது என பல்வேறு வழிகளிலும் தங்களது வாழ்க்கையை ஆக்கப்பூர்வமாக அவர்கள் செலுத்தி வருகின்றனர்.
இப்படி இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் திரும்பியும் கூட இன்னும் அவர்கள் மனதிலிருந்து சுனாமி ஏற்படுத்தி விட்டுச் சென்ற சோக வடுக்கள் மட்டும் மாறாமல் அலையடித்தபடியே உள்ளது.
வெறிச்சோடிய குமரி கிராமங்கள்:
சுனாமி தாக்குதலில் 5ம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி கிடந்தன. பலியானவர்களுக்கு நினைவு திருப்பலியும், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் உள்பட 800க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்துக்கு உயிர் இழந்தனர். 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீனவர்கள் உறவுகளையும், உடமைகளையும் இழந்து நிர்கதியாக தவிததனர்.
இந்த சோக சம்பவத்தின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி இன்று கடற்கரை கிராமங்களில் அமைதி நிலவியது. மவுன ஊர்வலங்களும், அஞ்சலி நிகழ்ச்சியும் நடந்தது. ஆழிபேரலையில் சிக்கி உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள இடத்தில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏத்தியும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
199 பேர் பலியான கெட்டில்பாடு கிராமத்தில் இன்று பெரும் சோகம் நிலவியது. பலியான தங்களது குழந்தைகளின் படங்களின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி பெண்கள் கதறி அழுதனர்.
குளச்சல் புதிய காணிக்கை அன்னை ஆலய வாளகத்தில் 414 பேர் புதைக்கப்பட்ட இடத்தில் மாலை நினைவஞ்சலி நிகழச்சி நடக்கிறது. இதில் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
கன்னியாகுமரி கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு அஞ்சலி செலுத்தினார். சுற்றுலா பயணிகளும் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications