விருதுநகரில் ரூ.100 கோடி நிதி மோசடி: பெண் கைது-இன்னொரு பெண் தலைமறைவு!
விருதுநகர்: விருதுநகரில் ரூ. 100 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மற்றொரு பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரும், குமாரலிங்கபுரம் சீனிவாசன் என்பவரும் விக்னேஷ் காலனியில் கோல்ட் பவர் மார்க்கெட்டிங் (பி) லிட். என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இதில் ரூ. 5,000 ரூபாய் செலுத்தினால் மாதத்துக்கு ரூ. 3,360 வீதம் 5 மாதத்துக்கு வழங்கப்பட்டது. இதற்காக 800 ஏஜன்டுகளை நியமித்து பொது மககளிடம் கேன்வாஸ் செய்யப்பட்டது.
பணம் செலுத்தியவர்களுக்கு முதலில் பணத்தை வழங்கிய நிறுவனம் பின் பலகாரணங்களைக் கூறி பணம் வழங்கவில்லை என்று புகார் எழுந்தது.
இந் நிலையில், நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான பேர் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.
சரவணபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயகுமார், சீனிவாசன் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதையுடத்து அந்த நிதி நிறுவனம் மீது புகார் மனுக்கள் மலை போல் குவிந்தன.
விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சீனிவாசனின் தந்தை, உறவினர்களின் வீடுகளில் 6 மணி நேரம் சோதனை செய்தனர்.
சோதனையின்போது பண்டல் பண்டலாக ரசீது கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்பு, சீனிவாசனின் மனைவி சொக்கம்மாளை போலீசார் கைது செய்தனர். விஜயகுமாரின் மனைவி ஜான்சி தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் பெரிய காளை தலைமையில் இரண்டு சப் இன்ஸ் பெக்டர்கள், 11 ஏட்டுகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.